அண்டர்கிரவுண்ட் கேபிள்… தயாநிதி மாறனை வறுத்தெடுக்கும் சமூக வலைஞர்கள்
பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் உதவியாளரையும், சன்டிவி ஊழியர்களையும் கைது செய்ததற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது நிலை குறித்தும் திமுகவினர் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். திமுக ஆதரவு சமூக வலைஞர்களும் தயாநிதி மாறனை வறுத்தெடுத்து வருகின்றனர்.
தனது வீட்டிற்கும் சன்டிவி அலுவலகத்திற்கும் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு அண்டர்கிரவுண்ட் கேபிள் அமைத்தார் தயாநிதிமாறன் என்று உண்மையை உலகுக்கு அறிவித்துள்ளார் நேற்றுவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை சன் டிவியின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த சக்சேனா.
ஒரு காலத்தில் சக்சேனா என்றால் சன்டிவி, சன்டிவி என்றால் சக்சேனா என்ற நிலை இருந்தது. திமுக ஆட்சி காலத்தில் சன் பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமா உலகில் இவர்கள் செய்த சிலபல காரியங்கள் சொல்லிமாளாது.
ஆட்சி மாறவே காட்சிகள் மாறின. அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளே போய் கவனித்த கவனிப்பில் எல்லாவற்றையும் கக்கவே, மீண்டும் சன்டிவி அலுவலகத்திற்குள் போகமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
அந்த விசுவாசத்திற்கு வஞ்சனையின்றி இப்போது சி.பி.ஐயிடம் போட்டுக்கொடுத்துவிட்டு நல்லபிள்ளையாக வெளிநாடுகளில் போய் உட்கார்ந்து கொண்டார்.
சக்சேனாவின் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு தயாநிதி மாறனை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஸ்டாலின் ஆதரவு பக்கத்தில்
ஃபேஸ்புக்கில் ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்படும் ‘அபி அப்பா என்கிற தொல்காப்பியன்' தயாநிதியின் சிக்கல், ஸ்டாலின் நிலை பற்றி பதிவிடப்பட்டுள்ளது.
"தன் மீது ஒரு குற்றச்சாட்டு பூதாகரம் ஆன போது பகிரங்கமாக பேட்டி கொடுத்தது பிடித்து இருந்தது. அவர் மீது சரியோ அல்லது தவறோ அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். ஆனால் மக்கள் மன்றத்தில் ஒரு இடைத்தேர்தல் நடக்கும் சமயம் இவரது வாக்குமூலமாக பகிரங்கமாக பேட்டி கொடுத்தது வரை சந்தோஷம்.
அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு அந்த தைரியம் எப்போதும் இருந்தது. புதியதலைமுறை, தந்தி தொலைக்காட்சி மற்றும் வடநாட்டு சேனல்களுக்கு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய தெம்பும் திராணியும் அண்ணன் ஆ. ராசா அவர்களுக்கு இருந்தது.
இதோ தயாநிதி மாறனும் ஊடகத்திடம் பேசிவிட்டார். இந்த தைரியம் ஏன் கனிமொழிக்கு இல்லை. இதே அண்ணன் ஆ.ராசா அவர்கள் தலைவர் கலைஞர் வீட்டில் இல்லை. தயாநிதி மாறன் தலைவர் வீட்டில் இல்லை. ஆனாலும் அவர்கள் சிலுவையைக்கூட தலைவர் கலைஞர் தான் சுமக்க நேரிடுகின்றது. ஆனால் கனிமொழி அவர்கள் 24 மணி நேரமும் தலைவர் கலைஞர் வீட்டிலேயே இருக்கும் நபர். அவர் இப்படி ஊடகங்களுக்கு பயந்து போய் ஓடிக்கொண்டு இருப்பது மேலும் மேலும் மக்கள் மத்தியில் சந்தேகத்தைத்தான் அதிகரிக்கும். தலைவர் கலைஞர் தான் அந்த சிலுவையையும் சுமக்க வேண்டும்.
திமுக தீர்மானங்கள்
இன்னும் ஒரு விஷயம்.... திமுக தன் சமீபத்திய பொதுக்குழுவில் மூன்றே மூன்று தீர்மானங்கள் மட்டுமே போட்டது இன்னும் பல விஷயங்கள் தீர்மானமாக போட்டு இருக்க வேண்டும் என நண்பர்கள் சிலர் குறைபட்டனர். நானும் கூடத்தான். ஆனால் பாருங்கள்.... அதில் இரண்டு தீர்மானங்கள் எத்தனை பவர்ஃபுல் என்று. பிஜேபி கால் ஊன்றக்கூடாது என்று தலைவர் போட்ட தீர்மானம் எந்த அளவு அவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி இருப்பின் அவர்கள் இந்த சுறுக்கு வலையை இழுப்பார்கள்??? அதே போல அதிமுகவின் ஊழல்கள் பட்டியல் கவர்னரிடம் கொடுக்கப்படும் என ஒரு தீர்மானம்.... 15.04.1995 ஆம் ஆண்டு 596 பக்க ஊழல் பட்டியல் ஆளுனர் சென்னா ரெட்டியிடம் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று கொடுத்ததன் விளைவு தான் இதோ இப்போதைய ஜெயாவின் வீட்டுச்சிறைக்கு காரணம்.
ஜெ - ஜெ சந்திப்பு
அது போல இன்னும் ஒரு முறை இப்போது கொடுத்தால் என்ன ஆகும்??? அந்த ஜெயாவின் பயம் தான் ஜெ-ஜெ சந்திப்பின் மூலம் (ஜெயா - ஜெட்லி) இந்த சுறுக்கு வலை மீண்டும் இழுக்கப்பட்டுள்ளதோ என்கிற சந்தேகமும் எனக்கு மட்டுமல்ல அரசியலை கவனிக்கும் சாதாரண ஆளுக்கும் இருக்கின்றது. ஆக பொதுக்குழு தீர்மானங்கள் தன் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டன என்றே கருதுகிறேன்.
நெஞ்சை விட்டு அகலவில்லை
திமுகவைச் சேர்ந்த ராஜாகுப்பம் முருகானந்தம் என்பவர் தனது வலைதள பக்கத்தில் திரு .தயாநிதி மாறன் தொலைபேசி விவகாரத்தில் திமுகவின் நிலை என்ன என்று பலர் கேட்கிறார்கள் ! என்னைப் பொறுத்தவரை இன்னும் திரு.கலாநிதி,திரு. தயாநிதி மாறனின் முந்தைய செயல்கள் என் நெஞ்சை விட்டு அகலவில்லை, விஜயகாந்தின் மாநாட்டை நேரடி ஒளிபரப்பு செய்தது,ஜெயலலிதாவின் பொது கூட்டத்தை நேரடி ஒலிபரப்பு செய்தது. இதை கூட மறந்து விடலாம் நடுநிலை என்றபோர்வையில் நம் உயிருக்கு உயிரான தலைவரையும் ,நம் தளபதியையும் இன்றுவரை அந்த சன் செய்திகளில் பெயர் சொல்லி அழைப்பதை என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை.
மாறன் சகோதரர்களுக்கு ஆதரவு
திரு. மாறன் சகோதரர்கள் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் சன் டி.வியின் பிரச்சார பங்கு என்ன 2011 மற்றும் 2014 தேர்தலில் சன் டி.வியின் பங்கு என்ன என்று எண்ணி பார்க்கவேண்டும், இப்படி பட்ட செயல்ல்களை இவர்கள் திருத்தி கொண்டால் ஒட்டுமொத திமுகவின் தொண்டனும் மாறன் சகோதரர்களை ஆதரிப்பார்கள். திமுகவின் எந்த பிரச்சனையை பற்றியும் கவலைபடாத இவர்கள் இன்று இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றுடன் திமுகவையும் செர்த்துகொள்கிறார்கள்,
எது எப்படியே தலைவர் தளபதி முடிவே நம் முடிவு !
கொக்கரக்கோ சௌமியன்
இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற நடுநிலை பார்வையாளர்கள் / வாசகர்களைக் கொண்டிருக்கும் முன்னனியில் இருக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்தும்.....
1. திமுகவுக்கு மிக மிக எதிராகத்தான் செய்திகளை வெளியிடுகின்றன.
2. அதிமுக மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்திகளை பரப்புரை செய்து வருகின்றன.
அதே சமயம்.....
தமிழகத்தில் பெரும்பான்மையான பொது மக்களால் பார்க்கப்படுகின்ற... மற்றும் கணிசமான நடுநிலையாளர்களால் வாசிக்கப்படுகின்ற காட்சி மற்றும் அச்சு ஊடகங்களாக இருப்பது.....
சன் டீவியும்..... தினகரன் / குங்குமம் போன்றவை மட்டுமே...!!!
இவற்றில்....
1. திமுகவுக்கு எதிரான செய்திகள் வருவது இல்லை.
2. அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் ஊழல்கள் அப்பட்டமாக தோலுரித்துக்காட்டப்படுகின்றன.
இதுவும் இப்பொழுது முடக்கப்படும் வேலைகள் ஆரம்பமாகியிருக்கின்றன....தட்ஸ் ஆல்...!!! என்று கூறியுள்ளார்.
களமிறங்கிய பாஜக
திமுக வேட்பாளராக திரு ஆனந்தன் அறிவிப்பு - திருவரங்கம் தேர்தலில் திமுக களம் இறங்கியது.!
அதிமுக வேட்பாளராக திருமதி வளர்மதி அறிவிப்பு - திருவரங்கம் தேர்தலில் அதிமுக களம் இறங்கியது.!
தயாநிதி மாறன் மீது சிபிஐ நடவடிக்கை - திருவரங்கம் தேர்தலில் பாஜக களம் இறங்கியது.!!
என்றும் சௌமியன் பதிவிட்டுள்ளார்.
மற்றவர்கள் சும்மாவா?
தயாநிதி பேட்டியையும், அவரது ஆதரவாக ஸ்டாலின் பேட்டி கொடுத்ததையும் திமுகவினரே கிண்டல் செய்து பதிவு போட்டுள்ளனர். உங்களுக்கு நாங்க சளைச்சவங்க இல்லை என்பதுபோல ஏராளமானோர் தங்களின் கருத்துக்களை ஃபேஸ்புக்கில் குமுறியுள்ளனர்.
போட்கிளப் டூ சன் டிவி
ஸ்ரீனிவாசன் நாகராஜன் என்பவர் தனது பதிவில் "ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைத்தான் ராமன். போட் கிளப்பில் இருந்து சன் டிவிக்கு அண்டர்கிரவுண்டில் கேபிள் அமைத்தான் மாறன்" என்று போட்டுள்ளது ஏராளமான லைக்குகளை அள்ளியுள்ளது. அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது.
பேசுவதற்கு ஒன்றும் கிடைக்காவிட்டால் எதையாவது எக்குத்தப்பாக போட்டு விவாதிப்பார்கள் நம் வலைஞர்கள். அல்வா மாதிரி செய்தி கிடைத்தால் விடுவார்களா ஒரே கொக்கரக்கோ கும்மாங்கோதான் போங்க!