ரேஷன் அரிசியில் அழுகி கிடந்த "எலி".. அதிர்ச்சியில் உறைந்த பரமக்குடி.. வைரலாகும் வீடியோ..!
ரேஷன் கடையில் அழுகிய எலி கிடந்த வீடியோ வைரலாகிறது
பரமக்குடி: ரேஷன் கடை அரிசியில் அழுகிய எலி ஒன்று கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் சுமார் 140 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பரமக்குடி அருகே உள்ள தெளிசாத்தநல்லூர் ரேஷன் கடையில் மாரிமுத்து என்பவர் அரிசி வாங்கி சென்றுள்ளார்..
அந்த அரிசியை தன்னுடைய வீட்டில் கொண்டு போய் வைத்தார்.. ஆனால், அப்போது வீட்டிற்குள் திடீரென துர்நாற்றம் வீசியது.. இதனால் வாங்கி வந்த அரிசியை கீழே கொட்டி பார்த்தார்..

ரேஷன் கடை
அப்போதுதான் அதில் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. அந்த எலி அழுகி போயிருந்தது.. இதுகுறித்து மறுபடியும் ரேஷன் கடைக்கு சென்று ஊழியர்களை கேட்டபோது, அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக தெரிகிறது. அத்துடன் வாக்குவாதமும் அவர்கள் செய்துள்ளனர். இதனால் அதிருப்திக்குள்ளான மாரிமுத்து, இனியாவது ரேஷன் பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்..

அதிருப்தி
இதை பற்றி மாரிமுத்து மேலும் சொல்லும்போது, "அரிசி வாங்கும்போதே ஒருமாதிரியாக இருந்தது.. இது ஏன் இப்படி இருக்கு என்று கடைக்காரரிடம் கேட்டேன், நல்ல அரிசி என்றுதான் சொன்னார்கள்.. வீட்டுக்கு வந்து பார்த்தபிறகுதான் அழுகிய எலி இருந்தது.. இதுவே கண் தெரியாதவர்கள், வயதானவர்கள் தெரியாமல் எடுத்து சாப்பிட்டால் பாய்சன் ஆகிவிட்டிருக்கும்.. அதே போல சர்க்கரையிலும் புழு மேலே மிதக்கிறது.. தரமான பொருட்களை வழங்க வேண்டும்.. முறையான பதிலை ஊழியர்கள் சொல்ல வேண்டும்" என்றார்.

அரிசி
அரிசியை கீழே கொட்டுவதும், அதில் எலி ஒன்று இறந்து கிடப்பதுமான வீடியோவும் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது... இதனையடுத்து பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சத்தியபாமா தலைமையிலான அதிகாரிகள் தெளிசாத்தநல்லூர் ரேசன் கடையில் ஆய்வு செய்தனர்... ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகள், சீனி, பருப்பு, கோதுமை மூட்டைகளையும் ஆய்வு செய்தனர்.

வீடியோ
தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்து கொண்டனர்.. அதற்குள் அந்த பகுதி மக்கள் முழுவதும் ரேஷன் கடையில் கூடிவிட்டனர்.. அவர்களிடம், வட்ட வழங்கல் அலுவலர் சத்தியபாமா, ரேஷன் கடையில் தரப்படும் பொருட்களின் தரம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.. எனினும் அரிசியில் அழுகிய எலியின் வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications