பட்டா கேட்ட தேன்மொழி.. செங்கல்பட்டு விஏஓ செய்த காரியம்.. விழுப்புரம் நகராட்சியில் அதென்ன ஆவணங்கள்?
செங்கல்பட்டு: தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் லஞ்ச சம்பவங்கள் அதிகரித்து வரும்நிலையில், அதற்கேற்றார்போல் கைது நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன. அந்தவகையில், விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் கைதாகி உள்ளார்.. அதேபோல, செங்கல்பட்டு விஏஓ கைதாகி உள்ளார்.. அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கைதாகி வருவது பொதுமக்கள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி கொண்டேயிருக்கிறது. என்ன நடந்தது விழுப்புரம்? செங்கல்பட்டில்?
சாதி சான்றிதழ் கோரியும், பட்டா கோரியும், நிலத்தை அளக்க கோரியும், உதவித்தொகை கோரியும், ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள்.. இதற்கென ஆன்லைனில் வசதிகள் இருந்தாலும், தங்களது பணிகள் துரிதமாக காரணத்தினால், விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகவே செல்ல நேரிடுகிறது.. தங்களது மனுக்கள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்கும்போது, அவர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் அதிருப்தி
இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே அதிகாரிகளுக்கு போன் செய்து புகார்கள் சொல்ல துவங்கி உள்ளனர்.. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கே வந்து, லஞ்சம் வாங்குவோரை கையும் களவுமாக கைது செய்கிறார்கள். விஏஓ, தாசில்தார், முதல் பெண் அதிகாரிகள் என யாருமே இதற்கு விதிவிலக்கு இல்லை. இதோ விழுப்புரத்தில் ஒருவர் சிக்கியிருக்கிறார்.
விழுப்புரம், காகுப்பத்தைச் சேர்ந்தவர் காத்தமுத்து.. இவருக்கு 58 வயதாகிறது.. கட்டிட தொழிலாளியாக உள்ளார்.. கடந்த 2016ம் ஆண்டு, இவரது அப்பா அபிமன்னன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.. எனவே, அபிமன்னனின் இறப்பு சான்றிதழ் கேட்டு காத்தமுத்து, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இறப்பு சான்றிதழ் பெறவில்லை
அபிமன்னன் இறந்து 8 வருடங்களுக்கும் மேலாகி விட்ட நிலையில், அவர் இறந்ததை உறுதி செய்து, ஏற்கனவே இறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. தற்போது இறப்பு சான்றிதழ் பெற வேண்டுமானால், நகராட்சி பதிவு அலுவலர் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதன் பிறகுதான், வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி, இறப்பு சான்றிதழ் வழங்க முடியும்.
எனவே, காத்தமுத்து சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள இறப்பு பதிவு அலுவலர் (துப்புரவு ஆய்வாளர்) மதன்குமார் என்பவரை அணுகியிருக்கிறார். 41 வயதான மதன்குமார், இறப்பு சான்றளிப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.. அதுமட்டுமல்ல, போன் செய்தால் நேரில் வந்து லஞ்சப் பணத்தை வாங்கிக்கொள்வதாகவும் சொல்லி உள்ளார்..
சுற்றி வளைத்த அதிகாரிகள்
இதுகுறித்து, காத்தமுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைபடி, மதன்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அழைத்தார். அதன்படியே, காத்தமுத்து மதன்குமார் வீட்டிற்கு சென்று, ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை தந்துள்ளார்.. அதனை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மதன்குமாரை கையும், களவுமாக பிடித்தனர்.
அவரை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையும் மேற்கொண்டனர்.. அங்கிருந்த ஆவணங்கள் சிலவற்றை போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள்.. அது தொடர்பான விசாரணையும் நடக்கிறது.. இப்போது மதன்குமார் ஜெயிலில் உள்ளார்.
செங்கல்பட்டு விஏஓ
அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், அருங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி என்பவர், இலவச வீட்டு மனை பட்டாவுக்கு, இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 11ம் தேதி, செங்கல்பட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வரால் 100 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு, மற்றவர்கள் அந்தந்த பகுதி விஏஓ அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
பட்டா தேன்மொழி
இதனால், இந்த பட்டா கேட்டு தேன்மொழி, அருங்குன்றத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சக்குபாய்,53, என்பவரை அணுகினார். இதற்கு அவர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டாராம். தேன்மொழியும், செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துவிட்டார். அதன்படி, ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை, தேன்மொழி விஏஓவிடம் தர முயன்றுள்ளார்.. உடனே அவர், உதவியாளர் சரவணன்,38, என்பவரிடம் கொடுக்கும்படி சொல்லவும், பணத்தை சரவணனிடம் கொடுத்தார்.
அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், விஏஓ சக்குபாய், உதவியாளர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அலுவலகத்தில் சோதனை செய்து, கணக்கில் வராத, 74,000 ரூபாயை கைப்பற்றி விசாரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications