அத்தையின் பேனா மட்டுமே போதும் என்ற தீபா போயஸ்கார்டன் இல்லத்துக்கு போட்டி போடுவது ஏன்?
ஜெயலலிதாவின் பேனா மட்டுமே போதும் என்ற தீபா இன்று அதிரடியாக ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்துக்கு நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா இன்று போயஸ் கார்டன் இல்லத்துக்குள் திடீரென நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்தையின் பேனா மட்டுமே போதும் என்று கூறி வந்த தீபா தற்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜெயலலிதாவின் சொத்துக்கு போட்டி போடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அச்சு அசப்பில் அவரது சாயலில் இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர். தீபா அரசியலுக்கு வந்து ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அரசியல் பிரவேசம் எடுத்த தீபா, தனது இயக்கத்துக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என பெயரிட்டார். அவரது அமைப்பின் இந்தப் பெயர் பெரும் கேலிக்கூத்தானது .
ஜெ.இடத்தை பிடிக்க போட்டி
இதைத்தொடர்ந்து தீபாவை சந்தித்த அதிமுக மகளிர் அணியினர், ஆர்கே நகர் தொகுதியில் தீபா போட்டியிட வலியுறுத்தினர். இதையடுத்து ஆர்கே நகர் தேர்தலில் தனித்து போட்டியிட்டார் தீபா. ஆனால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஜெ.இல்லம் நினைவிடம்
இந்நிலையில் அண்மையில் தீபாவின் சசோதரர் தீபக் அத்தையின் சொத்து தனக்குதான் சொந்தம் எனக்கூறி வந்தார். ஆனால் போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக்கப்படும் என அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
பேனா மட்டும் போதும்
தனது அத்தையின் சொத்து எதுவும் வேண்டாம். அத்தை பயன்படுத்திய பேனா மட்டுமே போதும் அதை மட்டும் கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சினார்.
தீபா மீது நன்மதிப்பு
தீபாவின் இந்த பேச்சும் கெஞ்சலும் மக்களிடையே அவர் மீது நன்மதிப்பை ஏற்படுத்தியது. அண்மையில் அத்தையின் சொத்தை நினைவுச்சின்னமாக மாற்றவிட மாட்டேன் என சபதம் எடுத்தார் தீபா.
ஜெ.வீட்டில் நுழைந்த தீபா
இந்நிலையில் இன்று ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்துள்ள தீபா அத்தையின் வீடு தனக்கு தான் சொந்தம் எனக்கூறி உள்ளே நுழைய முயன்றார். போலீசார் அவர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடித்தாரா தீபா?
அத்தையின் சொத்துக்கள் எதுவும் வேண்டாம் என்ற தீபா சொத்துக்கள் அனைத்தும் தனக்குதான் சொந்தம் என கூறி ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் குதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அத்தையின்ன சொத்து எதுவும் வேண்டாம் என தீபா நடித்தாரா என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.