வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் வங்ககடலில் உருவான ‘லெஹர்' புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வாக மாறியது.

இதன் காரணமாக தமிழக நிலப்பரப்பில் இருந்து ஈரப்ப தத்தை உறிஞ்சியதால் தமிழ் நாட்டில் கடந்த 4 நாட்களாக மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது உருவாகி உள்ளதால் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இலங்கை மற்றும் வட தமிழகத்தை ஒட்டி உள்ள வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.
உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கலாம். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இரவில் மழை பெய்ய வாய்ப்புண்டு என்றார்.
வெள்ளிக்கிழமையன்று தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையில் 4 செ.மீ. மழையும், வால்பாறையில் 1 செ.மீ. மழையும் பெய்துள்ளதாகவும் ரமணன் கூறினார்.












Click it and Unblock the Notifications