18கிலோ எடை கொண்ட மெகா சைஸ் கட்டிகள்.. மருத்துவ உதவி வேண்டி நிற்கும் தர்மபுரி பழனிச்சாமி
உடல் முழுவதும் உள்ள மெகா சைஸ் கட்டிகளுக்கு மருத்துவ உதவி வேண்டுகிறார் தர்மபுரியைச் சேர்ந்த பழனிச்சாமி.
தர்மபுரி: தர்மபுரி அருகே உடல் முழுவதும், சுமார் 18 கிலோ எடை கொண்ட பெரிய கட்டிகளுடன் 46 வயது ஆண் ஒருவர் மருத்துவ உதவி கிடைக்காமல் வீட்டிற்குள் அடைபட்டு வாழ்ந்து வருகிறார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள போடராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. 12 வயது வரை மற்ற குழந்தைகளைப் போல் ஆரோக்கியமாகத் தான் இவர் வளர்ந்துள்ளார்.
ஆனால், அதன்பின் இவரது உடலில் சின்னச் சின்னக் கட்டிகள் உருவாக ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில் உள்ளூரில் வைத்தியம் பார்த்துள்ளனர். அவை பலனளிக்கவில்லை. நாளுக்கு நாள் கட்டியின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.
பரிதாப நிலை:
உரிய சிகிச்சை இல்லாததால், தற்போது 46 வயதாகும் பழனிச்சாமியின் இரண்டு கைகள், கழுத்து தாடை, பின் பக்க கழுத்து என்று மொத்தம் எட்டு கட்டிகள் வளர்ந்து தொங்குகின்றது. இவற்றின் எடை சுமார் 18 கிலோ ஆகும். இதனால், தனது சுயதேவைகளுக்குக் கூட மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் அவர் வாழ்ந்து வருகிறார்.
கைவிட்ட மருத்துவம்:
எவ்வித மருத்துவ முறைகளும் பலனளிக்காததால், ஒரு கட்டத்தில் ஆபரேஷன் மூலம் கட்டிகளை நீக்கிவிடலாம் என பழனிச்சாமியும், அவரது பெற்றோரும் முடிவெடுத்துள்ளனர். ஆனால், கட்டிகளை நீக்கினால் கட்டிகளுக்குச் செல்லும் ரத்தம் உடல் முழுவதும் பரவி, மீண்டும் பல கட்டிகள் உருவாகும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் அந்த முடிவை பழனிச்சாமி கைவிட்டார்.
முடக்கம்:
தற்போது கழுத்தில் உள்ள கட்டி காரணமாக பழனிச்சாமியின் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. பழனிச்சாமியால் தனியாக நடக்கக்கூட முடிவதில்லை. இதனால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே அவர் முடங்கிக் கிடக்கிறார்.
திருமணமாகவில்லை:
பழனிச்சாமியின் உடன்பிறந்த மூவருக்கும் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். தனது உடலில் உள்ள கட்டிகள் காரணமாக பழனிச்சாமிக்கு மட்டும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. தற்போது வயதான தன் தாய் ராஜம்மாளின் பராமரிப்பில் அவர் வாழ்ந்து வருகிறார்.
கோரிக்கை:
தன் தாய்க்குப் பிறகு தனக்கு உதவி செய்ய யாருமில்லை எனக் கண்ணீர் விடுகிறார் பழனிச்சாமி. எனவே, தனக்கு மருத்துவ உதவி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் அவர் உதவி கோரி வருகிறார். விரைவில் தனது கட்டிகளுக்கு உரிய மருத்துவ உதவி அரசிடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உடல் முழுவதும் கட்டிகளுடன் வாழ்ந்து வருகிறார் பழனிச்சாமி.