ஜோலார்பேட்டைக்கு நற்செய்தி.. அதுவிடுங்க.. காட்பாடியில் "காவி" சத்தம்.. உடனே திமுக.. போலீஸாரின் மாஸ்
திருப்பத்தூர்: மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட முதல் அம்ரித் பாரத் ரயில் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை, காட்பாடி வந்து நின்றது.. அப்போது ஜோலார்பேட்டையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
அயோத்தியில் 2 அம்ரித் எக்ஸ்பிரஸ் ரெயில்களை கடந்த 30ம் தேதி பிரதமர் மோடி, காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்... அதில் ஒரு அமரித் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்குவங்க மாநிலம் மாவட்டத்தில் புறப்பட்டது. இது 5 மாநிலங்கள் இணைக்கும் வகையில், அதாவது, மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என்று 5 மாநிலங்களை இணைக்கிறது.

இந்த ரயில் கடந்த 30ம் தேதி புறப்பட்டு 32 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது . இந்த ரயில் மால்டா இருந்து பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா டவுன் வரை 2247 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இந்த அம்ரித் பாரத் ரயில், வந்தே பாரத் ரயில்போல அதிவேகமாக செல்லக்கூடியது. இந்நிலையில் முதல்முறை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் தமிழகத்திற்கு வந்தது..
2 நிலையங்கள்: காட்பாடி, ஜோலார்பேட்டை என இரண்டு ரயில் நிலையங்களில் 5 நிமிடம் மட்டும் நின்று செல்லும் நிலையில், நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையத்துக்கு இந்த ரயில் வந்தது..
இந்த ரயிலை தென்னக ரெயில்வே முதுநிலை கோட்ட மேலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ரயில்வே ஊழியர்கள் பலர் பூக்களை தூவி, முதல் ரயிலை வரவேற்றனர்.. அப்போது, திடீரென பாஜக - திமுக தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுவிட்டது.
நடைமுறை: முன்னதாக இந்த ரயிலை வரவேற்பதற்காக பிரத்யேகமாக மேடை, நடைமேடை அருகில் போடப்பட்டிருந்தது. ரயிலை வரவேற்க பாஜக மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கு திரண்டிருந்தனர்.. திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மேடையில் திரண்டிருந்தனர்.
அப்போது, பாஜக மாவட்ட நிர்வாகிகளும் அந்த மேடையில் ஏறி ரயிலை வரவேற்க முயன்றபோது, திமுகவினர் பாஜகவினரை தடுத்ததாக சொல்கிறார்கள். இதனால், திமுக - பாஜக நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வாக்குவாதமாக உருவெடுத்துவிட்டது. ரயில் வரும்நேரத்தில், இவர்களின் மோதலை பார்த்த ரயில்வே போலீசாரும், ரயில் நிலைய அதிகாரிகளும், விரைந்து சென்று 2 தரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்து வைத்தனர்..
சலசலப்பு: அதற்குள் ரயில் வந்துவிட்டது. பிறகு, உற்சாக வரவேற்பு தந்து, பச்சை கொடியும் காட்டி ரயிலை வழியனுப்பி வைத்தனர்.. ரயில் கிளம்பி செல்லும்போது, பாஜகவினர் "பிரதமர் மோடி வாழ்க" என்று முழக்கமிட்டதால், மறுபடியும் நடைமேடையில் சலசலப்பு ஏற்பட்டது... மறுபடியும் 2 தரப்பினரும் வாக்குவாதத்தில் இறங்கினார்கள். இதனால், இவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ரயில்வேவே துறை அதிகாரிகள் விழித்தனர்..
கடைசியில், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த, தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது.. இதற்கு பிறகே இரு கட்சியினரும் அமைதியாகினார்கள். ரயில் சென்றதும், 2 தரப்பினருமே அமைதியாக கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications