'தினகரன்' எரிப்பு வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக பிடிவாரண்ட் கோரி சிபிஐ இன்று மனு தாக்கல்
மதுரை: தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக பிடிவாரண்ட்டை பிறப்பிக்க கோரி சிபிஐ இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்ய உள்ளது.
மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் 2007-ல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் 17 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதை மறுஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. அதேபோல் பத்திரிகை அலுவலக எரிப்பில் உயிரிழந்த வினோத்தின் தாயார் பூங்கொடியும் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேருக்கும் தண்டனை வழங்கக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இருப்பினும் இந்த வழக்கில் சிபிஐ மெத்தனம்காட்டுவதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இதனிடையே நீதிபதிகள் பி.ஆர். சிவக்குமார், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையை திட்டமிட்டு இழுத்தடிக்கின்றனர். சிபிஐ தரப்பிலும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவதில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒத்துழைக்காத நிலையிலும், இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட முடியும். குற்றம்சாட்டப்பவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி சிபிஐ மனு தாக்கல் செய்வதாகக் கூறியதை ஏற்றுக்கொண்டு, விசாரணையை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.