'தில்லாலங்கடி' தினகரனின் 'ஸ்கெட்ச்' தெரியாமல் சிக்கி சிதையும் சொந்தங்கள், ஆதரவாளர்கள்!
தினகரனின் வியூகங்களை புரிந்து கொள்ளாமல் அவரது சொந்தங்கள், ஆதரவாளர்கள் பலரும் பலியாடுகளாகி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: சசிகலாவால் அரசியலுக்கு மீண்டும் வந்த தினகரன் கனகச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு தம்மை தலைவராக உயர்த்திக் கொண்டே வருகிறார். தினகரனின் பக்கா வியூகங்கள் தெரியாமல் அவரது சொந்தங்களும் ஆதரவாளர்களும் நம்பி நம்பி மோசம் போவது தொடர் கதையாகி வருகிறது.
'சின்னம்மா நீங்கதான் பொதுச்செயலாளர், முதல்வர்' என கூப்பாடு போடுகிற வீடியோக்களை பாருங்கள்.. அமைதிப்படையில் சத்யராஜ் எப்படி ஓரமாக நிற்பாரோ அதேபோல் ஒருமூலையில் தினகரன் நின்று கொண்டிருப்பார்.
சசிகலா முதல்வராக முயற்சித்த போதும் கூட தினகரன் ஒரு பி.ஏ. போலதான் செயல்பட்டு வந்தார். சசிகலா சிறைக்கு போகும்போது துணைப் பொதுச்செயலாளராக தினகரனையும் டாக்டர் வெங்கடேஷை இளைஞர் பாசறை செயலாளராகவும் தற்காலிக பொதுச்செயலரான சசிகலா நியமித்தார்.

எங்கே வெங்கடேஷ்?
அதாவது அதிமுகவில் இனி தினகரன் - வெங்கடேஷ் தான் என்கிற நிலையை சசிகலா உருவாக்கினார். ஆனால் தினகரனின் ஆட்டத்தில் வெங்கடேஷ் என்பவர் என்ன ஆனார்? என்பதே தெரியாத நிலை உருவானது.

சசி படம் இல்லாமல் பிரசாரம்
அடுத்ததாக சசிகலாவைவிட படுவேகமாக முதல்வர் நாற்காலியை நோக்கி நகர முயற்சித்தார் தினகரன். இதனால் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டார். முதல் முறையாக ஆர்கே நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சசிகலாவை ஓரம்கட்டி அவரது படத்தை போடாமலேயே பிரசாரம் செய்தார் தினகரன்.

கூவத்தூர் ஸ்டைல்
தினகரனின் இந்த நடவடிக்கையால் சசிகலாவே அதிர்ந்து போனார். தொடர்ந்து முதல்வர் நாற்காலிக்கு குறிவைத்து எம்.எல்.ஏக்களை வளைக்கத் தொடங்கினார். 18 எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ஸ்டைலில் புதுவைக்கும் குடகுக்கும் அழைத்துச் சென்றார். ஆனால் தினகரனுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. கடைசியாக அவரை நம்பிய 18 எம்.எல்..ஏக்கள் பதவிதான் பறிபோனது.

எம்.எல்.ஏக்கள் ஒப்பாரி
இப்போது 18 எம்.எல்.ஏக்களும் பதவியை பறிகொடுத்து ஒப்பாரி வைக்கின்றனர். ஆனால் தினகரனோ ஒய்யாரமாக சட்டசபைக்குள்ளே நுழைந்துவிட்டார்.

விவேக், கிருஷ்ணபிரியா
சசிகலா குவித்த சொத்துகளை இளவரசி குடும்பம் நிர்வகிப்பதையும் தினகரன் விரும்பவில்லை. இதனால் விவேக், கிருஷ்ணப்பிரியாவை ஒதுக்கும் வேலைகளில் முழு வெற்றி பெற்று ஜெயா டிவியையும் நமது எம்ஜிஆரையும் வசமாக்கிக் கொண்டார் தினகரன்.

திவாகரனை ஒதுக்கிய தினகரன்
ஒருகட்டத்தில் தமக்கு ஆதரவாக இருந்த திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்தையும் இப்போது தினகரன் ஒதுக்கி வைத்துவிட்டார். தாம் ஆர்கே நகரில் வெல்ல வேண்டும் என்பதற்காக வெற்றிவேலை வைத்து ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட வைத்தார். தினகரனுக்காக வெற்றிவேல் சர்ச்சையில் சிக்கினார்.

வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன்
இப்போது எங்கே தாம் பேசினால் உள்ளே வைத்து விடுவார்களோ என கருதி ஊழல் பற்றி பேசுமாறு வெற்றிவேலையும் தங்க தமிழ்ச்செல்வனையும் தூண்டிவிட்டார் தினகரன். அவர்களும் பேசப்போய் இப்போது பலியாடுகளாக போலீசாரால் தேடப்படும் நிலையை உருவாகிவிட்டது. ஆனால் எதுவுமே தெரியாதது போலவே தினகரனும் பேசி வருகிறார்.

தனிக்கட்சி தொடங்கும் தினகரன்
தினகரனைப் பொறுத்தவரை தம்மை ஒரு எம்ஜிஆராக நினைத்துக் கொண்டிருக்கிறார். தமக்கு கூட்டம் கூடுகிறது என்பதால் தனிக்கட்சி தொடங்குவதில் மும்முரமாக இருக்கிறார். அந்த கட்சிக்கும் தாமே பொதுச்செயலாளர் என சசிகலா நிபந்தனை விதித்ததை தினகரன் ரசிக்கவில்லை. விரைவில் தனிக்கட்சியை தினகரன் அறிவிக்கும் போது அவரது விஸ்வரூபத்தை ஆதரவாளர்கள் உணருவார்கள் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications