தினகரன் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?... தங்கதமிழ்செல்வன் எம்எல்ஏ கேள்வி!
டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கப் போவதாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை : டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கப் போவதாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி அணியைச் சேர்ந்த குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தினகரன், அதிமுகவில் இருந்து விலகி வெகுநாட்கள் ஆகிவிட்டது. ஜெயலலிதா தலைமையில் கட்சியை நடத்திய பொறுப்பாளர்கள் எல்லாம் தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தினகரன் தனிக்கட்சி தொடங்க ஆயத்த பணியை ஆரம்பித்து விட்டார் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் ராமச்சந்திரனின் கருத்துக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது: குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனின் பேச்சு முட்டாள்தனமாக உள்ளது. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்கிற போது தினகரன் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?

தொண்டர்கள் எங்கள் பக்கமே
அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களின் பக்கம்தான் ஒன்றரை கோடி தொண்டர்களும் உள்ளனர். எனவே தொண்டர்களை குழப்புவதற்காக குன்னம் எம்.எல்.ஏ. இப்படி பேசுகிறார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் பொய்ப்பிரசாரம்
முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திட்டமிட்டே தினகரன் கட்சி ஆரம்பிக்க போவதாக பொய்ப்பிரச்சாரத்தை முன் எடுக்கின்றனர். இந்த பொய்ப்பிரசாரம் மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.

என்ன நியாயம் இது?
அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவது போலத் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும். முதல்வரை மாற்ற வேண்டும் என்று சொன்ன 18 எம்எல்ஏக்களை நீக்கிவிட்டு ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவருக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது தான் இவர்களுக்குத் தெரிந்த நியாயம்.

ஜெ, சசி மீதும் வழக்கு போடுவர்களா
நீட் நுழைவுத்தேர்வை கண்டித்து துண்டுபிரசுரம் வழங்கியதற்காக தினகரன் மீது வழக்கு போடுகிறார்கள். அந்த துண்டு பிரசுரத்தில் தினகரன் படம் இருந்ததால் வழக்கு போடும் அரசு, பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் படமும் உள்ளதால் அவர்கள் மீதும் வழக்கு போடுவார்களா.

மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்
அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டுள்ள அரசு, தினகரன் மீது வழக்கு போட்டு எங்களை மிரட்டிப் பார்க்கிறது. அவர்களால் முடிந்தால் தினகரனை கைது செய்யட்டும், இதற்காக நாங்கள் பயப்பட மாட்டோம், என்றார்.












Click it and Unblock the Notifications