ஜெயலலிதா வாரிசாக தினகரன் தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்.. சென்னை ஹைகோர்ட்டில் ஈபிஎஸ் மனு
ஜெயலலிதாவின் வாரிசாக தினகரன் தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார் என சென்னை ஹைகோர்ட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா வாரிசாக தினகரன் தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார் என சென்னை ஹைகோர்ட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கினார். மேலும் புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
அந்த கொடி அ.தி.மு.க. கொடி போன்று இருப்பதாக அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கொடியில் கருப்பு, வெள்ளை, சிவப்பு, மத்தியில் ஜெயலலிதா உருவப் படம் பொறிக்கப்பட்டிருந்தது.
ஹைகோர்ட்டில் மனு
இந்த கொடிக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் மனு
அதில் ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ள டி.டி.வி.தினகரனின் கட்சி கொடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் முதல்வர் தரப்பில் இன்று விளக்கமனு தாக்கல் செய்யப்பட்டது.
தினகரன் முயற்சி
அதில் அம்மா என்ற பெயரையும், ஜெயலலிதாவின் படத்தையும் பயன்படுத்தி ஜெ.வின் வாரிசு என காட்டிக்கொள்ள டிடிவி.தினகரன் முயல்வதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுக கொடி போல் உள்ள கொடியை டிடிவி.தினகரன் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக புகழை
மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கட்சிக் கொடியை தினகரன் வடிவமைத்துள்ளார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அதிமுக புகழை நேர்மையற்ற முறையில் பயன்படுத்துகிறார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.