ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை டிஸ்மிஸ் செய்யுங்கள் - தினகரன் ஆதரவாளர்கள் ஹைகோர்டில் மனு
சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிடக்கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஹைகோர்ட்டில் மனு தா
சென்னை: தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசிற்கு எதிராக வாக்களித்த பன்னீர் செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் பிப்ரவரி 16ஆம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார்.
இதைத் தொடர்ந்து அவர் தலைமையிலான அதிமுக அரசு மீது பிப்ரவரி 18ஆம் தேதியன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த சமயத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவர் உள்பட 12 அதிமுக எம்எல்ஏக்கள் தனியாக செயல்பட்டனர். சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
அப்போது சபாநாயகர் தனபால் டிவிசன் வாரியாக எம்எல்ஏக்களை எழுந்து நிற்க செய்து நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தினார். அந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்களும் இருக்கையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
என்றாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்களும் கட்சி கட்டுப்பாட்டை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் 12 பேர் மீதும் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுத்து அறிவிப்பு வெளியிடவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். இதனால் அவர்கள் மீதான நடவடிக்கைக்கு எந்த முகாந்திரமும் இல்லாமல் போய் விட்டது.
இந்த நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் 21 எம்.எல்.ஏ.க்களில் ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது அரசியல் ரீதியாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சபாநாயகரிடம் மனு கொடுத்தார். அதற்கு சபாநாயகர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த திமுக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்க்கு மாற்ற செம்மலை மனு அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்க்கு மாற்ற செம்மலை மனு அளித்துள்ளார்.
சபாநாயகரின் அதிகார வரம்பை உச்சநீதிமன்றமே விசாரிக்க முடியும் என செம்மலை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களை நீக்க கோரி நாங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று கூறினார் அதன்படி இன்று தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
எடப்பாடி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது எதிர்த்து செயல்பட்ட ஓ.பி.எஸ். உள்பட 12 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகர், ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 12 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சபாநாயகரிடம் மார்ச் 30ஆம் தேதியன்று மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கூறியுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.