சமரசம் ஆவார்களா?.. தினகரனுக்கு ஒரு துணை முதல்வர் பதவி பார்சல் கிடைக்குமா?.. என்ன ஆகும் அதிமுக?
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் முன்னிலை வகித்து வருவதால் அவருடன் அதிமுகவினர் சமரசம் பேசி தினகரனுக்கும் ஒரு துணை முதல்வர் பதவி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு, தினகரன் அணியினரும், அதிமுக வினரும் சமரசமாக போக வாய்ப்புள்ளதாகவும் அப்போது தினகரனுக்கு மேலும் ஒரு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆர்கே நகருக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுக சார்பில் தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை ஜெயிக்க வைக்க முதல்வரே தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் அந்த தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டுவிட்டது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தினகரன் லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை செல்ல நேரிட்டது.
இரு அணிகளும் இணைய பேச்சு
இரட்டை இலையை மீட்டெடுக்க இரு அணிகளும் இணைய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டன. இதையடுத்து இணைப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அப்போது ஓபிஎஸ் அணியினர் இரு கோரிக்கையை வைத்தனர். அதாவது தினகரன், சசிகலா குடும்பத்தினரை விலக்கி வைப்பது மற்றொன்று ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க விசாரணை ஆணையம் ஏற்படுத்துவிடுவது ஆகியன ஆகும்.
ஓரங்கட்டப்பட்ட தினகரன்
இதையடுத்து தினகரனை ஓரங்கட்ட எடப்பாடி அணியினர் முடிவு செய்தனர். அதுபோல் சசிகலாவையும் ஒதுக்கி வைப்பதாக தெரிவித்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையத்தையும் தமிழக அரசு ஏற்படுத்தியது. இதையடுத்து ஒரு நிறைந்த அமாவாசையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டன.
மாஃபாவுக்கு அமைச்சர் பதவி
இதையடுத்து கட்சியிலும் , ஆட்சியிலும் முக்கிய பதவியை வழங்குவதாக எடப்பாடி அணியினர் ஓபிஎஸ் அணிக்கு பேரம் பேசியதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி கிடைத்துவிட்டது. மாஃபா பாண்டியராஜனுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது. இதனால் எல்லாம் சுமூகமாக போய் இரட்டை இலை சின்னமும் கிடைத்துவிட்டது. எனினும் தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.
தினகரன் முன்னிலை
இரட்டை இலை கிடைத்தும் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மதுசூதனனை காட்டிலும் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் முன்னிலையில் இருந்து வருகிறார். இதுகுறித்து செல்லூர் ராஜூவிடம் தனியார் தொலைகாட்சி நிறுவனம் கேள்வி எழுப்புகையில், குக்கரை நாங்கள் எதிர்க்கவில்லை. இரட்டை இலை வாக்கு கேட்டோம். ஆனால் குக்கருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறவில்லையே. எதுவாகினும் தினகரனை நாங்கள் தோளில் வைத்து கொண்டாடியவர்கள் என்று ஒரே போடாக போட்டுள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தை
ஆட்சி , அதிகாரம் என்றால் அதிமுகவினர் யாரிடமும் இறங்கி பேச்சுவார்த்தை நடத்துவதில் வல்லவர்கள் என்ற பேச்சு உள்ளது. அந்த வகையில் தினகரன் வளர்ந்தால் அதிமுகவுக்கு பாதகம் ஏற்படும் என்பதால் வழக்கம் போல் அவரிடம் சமாதானம் பேசி அவருக்கு மேலும் ஒரு துணை முதல்வர் பதவி வழங்க வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய பதவியை உருவாக்க என்ன பஞ்சமா.. இல்லை தமிழகத்துக்கு இரு துணை முதல்வர்கள் என்றால் மக்கள் வேண்டாம் என்று விடுவார்களா.... தினகரனுடனான பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணி என்ன சொல்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.