மதநல்லிணக்கத்தை உணர்த்தும் பள்ளிவாசல் “பூக்குழி” திருவிழா- சாதி மத பேதமில்லாமல் குவிந்த பக்தர்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் சாதி, மத பேதமின்றி ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே எமக்கலாபுரம் என்னும் கிராமம் உள்ளது.
இக்கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது.
10 நாட்கள் திருவிழா:
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 7 ஆவது நாளான இன்று அதிகாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பூக்குழி இறங்க முறையாக விரதம்:
இந்நிகழ்ச்சியில் எமக்கலாபுரத்தை சுற்றி உள்ள 18 பட்டியை சேர்ந்த இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ பொதுமக்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக கடந்த வாரம் முறையாக விரதம் இருக்க தொடங்கினர்.
மத நல்லிணக்க திருவிழா:
விரதம் இருந்த பக்தர்கள் இன்று நடைபெற்ற பூக்குழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக முஸ்லீம் பிரமுகர் ஒருவர் துவா ஓதிய பின்பு முதலில் அவர் பூக்குழி இறங்கினார்.
கஷ்டங்கள் அனைத்தும் தீரும்:
அதனை தொடர்ந்து விரதம் மேற்கொண்ட அனைத்து மதத்தினை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றன் பின் ஒருவராக பூக்குழி இறங்கினர். இதனால் குழந்தை பாக்கியம், குடும்ப கஷ்டம், நோய் நொடி நீங்கும் என நம்பிக்கை.
ஒற்றுமையுடன் நேர்த்திக் கடன்:
தொழில் சிறப்படைய வேண்டி, திருமண பாக்கியம் வேண்டி இப்பகுதி மக்கள் சாதி மத பேதமின்றி பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். முஸ்லீம் பள்ளிவாசல் எதிரே நடைபெற்ற பூக்குழி திருவிழா மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.