சப்-கலெக்டரின் தூள் பறக்கும் அதிகாரம்: அலறும் திண்டுக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மக்கள் மற்றும் போலீசாரை புதிதாக பொறுப்பேற்றுள்ள சப்-கலெக்டர் அலற வைக்கிறாராம்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மதுசூதனன் ரெட்டி. அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். வரும் 28ம் தேதி மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் அருகே இருக்கும் திருமலையில் மக்களிடம் குறைகேட்டு மனுக்கள் வாங்கவிருக்கிறார்.
இதற்காக மதுசூதனன் நேற்று திருமலையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வை முடித்துக் கொண்டு திரும்புகையில் சோதனைச்சாவடியில் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். எந்த வாகனத்தையும் மேலேயும் செல்ல அனுமதிக்கக் கூடாது, கீழேயும் வர அனுமதிக்கக் கூடாது என்று வனத்துறை காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அப்போது மேலே இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டுள்ளார். அவர்கள் வேறு வழியில்லாமல் நடந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ரோந்தில் ஈடுபட்ட போலீசார் வைத்திருந்த வாக்கி டாக்கியைப் பறித்து கீழே போட்டு உடைத்துள்ளார் மதுசூதனன். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் யார் என்ற உண்மை தெரிந்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
இது தவிர பொது இடங்களில் மதுசூதனன் செய்யும் அதிகாரத்தை பொறுக்க முடியவில்லை என்று மக்கள் புலம்புகிறார்கள்.