லைகாவை அணுகாமல், என்னை மிரட்டுறாங்க.. பாதுகாப்பு கேட்ட முருகதாஸ்! ஹைகோர்ட் நோட்டீஸ்
Recommended Video
சென்னை: தர்பார் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக மிரட்டல் வருவதால், பாதுகாப்பு கோரி இயக்குநர் முருகதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பிப்ரவரி 10ம் தேதி விளக்கமளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக வினியோகிஸ்தர்கள் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த 3 ம் தேதி, தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு, வினியோகஸ்தர்கள் எனக் கூறிக் கொண்டு வந்த 25 அடையாளம் தெரியாத நபர்கள், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி பிரச்சனை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், லைகா நிறுவனத்திற்காக தர்பார் படத்தில் தான் இயக்குனராக மட்டுமே தான் பணியாற்றியுள்ள நிலையில், படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் தனக்கு எந்த வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல், தன்னை மிரட்டி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 3ம் தேதி முதல் இச்சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிப்ரவரி 4ம் தேதி காவல் துறைக்கு மனு அளித்ததாகவும், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்த சம்பவங்கள் இரு வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்துள்ளதால், இதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதி, முருகதாசின் கோரிக்கை மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து எடுத்த நடவடிக்கை தொடர்பாக பிப்ரவரி 10ம் தேதி விளக்கமளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.