பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி.. ஏமாற்றம் அளிக்கிறது.. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
சென்னை: சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி கொடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி கொடுத்துள்ளது.
சில நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி கொடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சக கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வெற்றி செல்வன் இது குறித்து கூறியதாவது:- வழக்கமாக இந்த மாதிரியான அனுமதி நிபுணர் குழுவின் பரிந்துரைப்படிதான் கொடுக்கப்படும். எனவே நிபுணர் குழு முன்பாக நாங்கள் வைத்திருந்த கோரிக்கை என்னவாக இருந்தது என்றால் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வில் போதுமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்தான பிரச்சினைகள், கடலோரங்கள் குறித்தான பிரச்சினைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதை முன்வைத்து இருந்தோம். அதேபோல கருத்து கேட்பு கூட்டத்திலும் சில நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. அச்சம் இல்லாமல் எல்லோரும் கருத்து கூறுவதற்கான சூழல் அங்கு நிலவவில்லை.
எனவே வெளிப்படைத்தன்மையாக நடைபெறவில்லை. எனவே அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற இரண்டு கோரிக்கைகளை நாங்கள் வைத்து இருந்தோம். நிபுணர் மதிப்பீட்டு குழு இவற்றை கருத்தில் கொள்ளாமல் இந்த பரிந்துரையை கொடுத்து இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் மத்திய அரசு இந்த அனுமதியை கொடுத்துள்ளது. எனவே இந்த அனுமதி ஏமாற்றம் அளிக்க கூடிய விஷயமாகத்தான் பார்க்கிறோம்.
மாறி வரும் சூழலுக்கு ஏற்ப கடல் மட்டத்தின் மாற்றங்கள் என்னவாக நிகழும். குறிப்பாக கடலின் நீரோட்டத்திற்கு ஏற்ப எந்த பகுதி உயரக்கூடும் எந்த பகுதி தாழ்வாகக் கூடும் என்பதற்கான ஆய்வுகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவில்லை. எனவே இதை மேற்கொள்ளாமல் அனுமதி கொடுத்து இருப்பது... வருத்தத்திற்குரிய விஷயம் தான். அடுத்த கட்டமாக சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications