தகுதிநீக்க நகலை முறையாக கொடுக்கவில்லை... 2 நாட்களுக்கு பிறகே கிடைத்தது.. தினகரன் தரப்பு வாதம்
சட்டமன்றம் என்ற குடும்பத்தை கட்டிக் காப்பவரே சபாநாயகர் என்று டிடிவி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
சென்னை: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க நகல் பத்திரிகை, அரசிதழில் வெளியிடப்பட்ட இரு நாள்களுக்கு பிறகே எங்களின் கைக்கு கிடைத்தது என்று டிடிவி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த மாதம் 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில் 18 பேரின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் படி இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் 500 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சபாநாயகர் தரப்பு நீதிபதியிடம் தாக்கல் செய்தது.
இந்நிலையில் காலை முதலே அரசு தரப்பும், தினகரன் தரப்பும் சூடான விவாதங்கள் முன்வைத்தனர். அரசு சார்பில் முகுல் ரோத்தகியும், தினகரன் சார்பில் அபிஷேக் சிங்கிவியும் ஆஜராகினர்.
உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கிய இந்த வழக்கு விசாரணையில் அபிஷேக் சிங்வி வாதங்களை முன்வைத்த வைத்தார். அப்போது அவர் கூறுகையில், தகுதிநீக்க உத்தரவு நகல் பத்திரிகை, அரசிதழுக்கு அனுப்பப்பட்ட 2 நாள்களுக்கு பின்னரே எங்களுக்கு வழங்கப்பட்டது.
தகுதி நீக்க உத்தரவு நகல் எங்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டது. தகுதிநீக்க நகல் பத்திரிகை செய்தி, அரசிதழில் வெளியிட்டுள்ளனர். முதலில் எங்களுக்கு அனுப்பாதது மோசமான நடைமுறையாகும். சபாநாயகர் என்பவர் சட்டமன்றம் என்ற குடும்பத்தை கட்டிக் காப்பவராக செயல்பட வேண்டும் என்றார் அபிஷேக் சிங்வி. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரவிச்சந்திரபாபு வழக்கு விசாரணையை வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications