தீபாவளிக்கு இன்னும் 4 மாசம் இருக்கு... ரயில் டிக்கெட் ரிசர்வேசன் 10 நிமிஷத்துல காலி ஆயிருச்சே!
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய பத்து நிமிடத்தில் விற்று தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 6,7ம் தேதிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில் நவம்பர் 8ம் தேதிக்கான ரயில் டிக்கெட் ரிசர்வேசன் நாளை காலை தொடங்க உள்ளது.
நவம்பர் 10ம் தேதி (செவ்வாய்கிழமை) இந்த வருடம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சரியாக 4 மாதங்கள் இருக்கின்றன. சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தயாராகி வந்தனர். ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நவம்பர் 6ம் தேதிக்கான (வெள்ளிக்கிழமை) டிக்கெட் ரிசர்வேசன் நேற்று தொடங்கியது.
முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பின.
நிரம்பிய டிக்கெட்டுகள்
நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமைக்கான டிக்கெட் ரிசர்வேசன் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. பெரும்பாலானவர்கள் ஆன்-லைன் மூலமாக முன்பதிவு செய்தனர். முன்பதிவு மையத்தில் கூட்டம் இல்லை. ஆனாலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் திருச்சி, கோவை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில்களிலும் இடங்களில் நிரம்பி விட்டன.
காத்திருப்போர் பட்டியல்
நெல்லை, அனந்தபுரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ்களில் 2ம் வகுப்பு படுக்கை காத்திருப்போர் எண்ணிக்கை 300க்கும் மேல் உள்ளது. மதுரைக்குச் செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும், கோவை சேரன் எக்ஸ்பிரசிலும் 400 ஆக உள்ளது. திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரசில் 2ம் வகுப்பு காத்திருப்போர் எண்ணிக்கை 200 ஆகவும் 3 அடுக்கு ஏ.சி படுக்கை 50 ஆகவும் இருக்கிறது.
ஏசி பெட்டிகள் காலி
திருச்செந்தூர் எக்ஸ்பிரசிலும் 100க்கும் மேலான இடங்கள் காலியாக இருக்கின்றன. மதுரை, நெல்லை, தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏ.சி. வகுப்புகளில் இடங்கள் இருக்கின்றன. டிக்கெட் முன்பதிவுகள் ஆன்-லைன் மூலமாகவே நடைபெறுவதால் டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் இல்லை.
விரல் நுனியில் டிக்கெட்
முன்பெல்லாம் தீபாவளிக்கு டிக்கெட் எடுக்க காலை 5 மணியில் இருந்தே கவுண்டர்கள் காத்திருப்பார்கள். ஆனாலும் பாதிபேர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்வார்கள். இப்போதோ யாரும் காத்திருப்பது இல்லை ஆன்-லைன் மூலமாக டிக்கெட்டுகளை புக் செய்து விடுகின்றனர். இதனால் காத்திருப்பு மிச்சமாகிறது. கால விரயமும் தவிர்க்கப்படுகிறது.
நவம்பர் 8க்கு ரிசர்வேசன்
நவம்பர் 8ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. செவ்வாய்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் பெரும்பாலோனோர் சனிக்கிழமை இரவே சொந்த ஊருக்கு கிளம்பிவிடுவார்கள். எனினும் சனிக்கிழமை டிக்கெட் கிடைக்காதவர்கள் ஞாயிறன்று சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் நிலைய கவுண்டர்களிலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நவம்பர் 9ம் தேதி
பெரும்பாலோனோர் தீபாவளிக்கு முதல்நாள் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள். நவம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை பயணம் செய்வதற்கான முன்பதிவு வரும் 12ம் தேதி (ஞாயிறு கிழமை) தொடங்குகிறது.
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடனேயே சில நிமிடங்களில் நிரம்பி விடுவதால் விடுவதால் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல முடியுமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் சிறப்பு ரயில் பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.