விஜயகாந்த்தை நம்பி ஏமாறாமல் தப்பிச்சுட்டோம்ல.. தா.பாண்டியன் பேச்சு
திருப்பூருக்கு வந்த தா.பாண்டியன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற மார்ச் மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விவாதித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் எந்தவித நிலையும் இதுவரை எட்டப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறோம்.
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமு.கூட்டணி வெற்றி பெறும். விஜயகாந்துடன் கூட்டணி அமைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். முன்கூட்டியே ஏமாறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோடைகாலம் தொடங்கி விட்டதால் மின்தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளுக்கு மேல் எங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. அந்த இரு கட்சிகள், மத்தியில் ஆளும்போது கடைபிடிக்கும் கொள்கைகள் ஒரே மாதிரியானவை. ஆகவே பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.
நாட்டுக்கு நல்லதை செய்யும் வகையில் ஒரே கொள்கையையுடன் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கிறோம். பா.ஜ.க தனிநபரை வைத்து தேர்தல் பிரசாரம் செய்கிறது. ஒரு அரசு கடைபிடிக்கும் கொள்கை தான் தேர்தலில் வெற்றியை கொடுக்கும்.
இடதுசாரிகள் கொண்ட மாற்று அணியின் பலம் பெருகி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக அணியுடன் சேர்ந்து சந்திக்கிறோம்.
இதுதவிர பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தேவகவுடா ஆகியோரும் இடதுசாரிகளுடன் இணைந்திருக்கிறார்கள். முலாயம் சிங் யாதவ் தேர்தலுக்கு பின் இடதுசாரிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆந்திராவில் 2 கட்சியினர் கூட்டணிக்கு பேசி வருகின்றனர். இதனால் தற்போதைய நிலையில் 14 கட்சிகள் இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்திருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம்.
இடதுசாரிகள் கொண்ட மாற்று அணி நாடாளுமன்ற தேர்தலில் 500 தொகுதிகளில் போட்டியிடும். மத்தியில் மாற்று அணி ஆட்சி அமைக்கும். இந்த அணியின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. அதற்கேற்ப மக்கள் தீர்ப்பு அமையும் என்றார் தா.பாண்டியன்.