டாஸ்மாக் கடை உடைப்பு: புழல் சிறையிலுள்ள கல்லூரி மாணவர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு
சென்னை: டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசி அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார்.
சென்னை, அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இணைந்து மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாரிங்டன் சாலை செனாய் நகரில் இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். சிலர், கடை மீது கற்களை வீசி தாக்கினர். அப்போது மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவிகள் உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர். கொலை மிரட்டல், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உட்பட 9 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான 15 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், புழல் சிறைக்கு இன்று சென்ற திமுக, பொருளாளர் ஸ்டாலின், மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். மாணவர்கள் போராட்டத்திற்கு தனது போராட்டம் உண்டு என்று கூறிவிட்டு வந்தார்.
இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், புழல் சென்று மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்து திரும்பினார். முன்னதாக, மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கைவிடுத்தார்.