தேமுதிகவுக்கு அடி மேல் அடி... மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பறி கொடுக்கிறது!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பலத்த அடி வாங்கிய தேமுதிகவுக்கு அடுத்த அடி காத்திருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை அது பறி கொடுக்கவுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் மற்ற எல்லோரையும் விட தேமுதிகவுக்குத்தான் மிக பலத்த அடியை மக்கள் கொடுத்துள்ளனர். அக்கட்சித் தலைமை ஆடிய ஆட்டத்திற்கும், பேசிய பேச்சுக்கும் மக்கள் செமத்தியாக கவனித்து அனுப்பியுள்ளனர்.
இதை நிச்சயம் தேமுதிகவும் சரி, அதன் தலைவர்களும் சரி எதிர்பார்க்கவில்லை. அக்கட்சியினரின் பேச்சு மூச்சையே காணோம். குறிப்பாக பேசாத பேச்செல்லாம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்தின் சத்தத்தையே காணோம்.
இந்த நிலையில் தேமுதிகவின் மாநிலக் கட்சி அந்தஸ்து பறி போகவுள்ளது. போதிய அளவில் வாக்குகளைப் பெறத் தவறியதால் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கவுள்ளது.

2006 சட்டசபைத் தேர்தலில்
2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில்தான் முதல் முறையாக தேமுதிக போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிட்டது அக்கட்சி. அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் வெற்றி பெற்றார். மற்ற அனைவரும் தோல்வி அடைந்தனர்.

10.4% வாக்குகள்
விஜயகாந்த்தைத் தவிர மற்ற அனைவருமே டெபாசிட்டை இழந்தனர். இத்தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீதம் 10.4 ஆகும். இதனால் தேமுதிகவுக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்தது. முரசு சின்னம் நிரந்தரமானது. 2006 சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு 10% வாக்குகளைப் பெற்றது தேமுதிக . 2006 தேர்தலுக்குப் பிறகு மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற்றது தேமுதிக.

2009 லோக்சபா தேர்தல்
அடுத்து 2009ல் வந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டியிட்டது தேமுதிக. ஆனால் எந்தத் தொகுதியிலும் அது வெற்றி பெறவில்லை. ஆனால் 10.9 சதவீத வாக்குகளைப் பெற்றதால் அதன் அங்கீகாரம் தொடர்ந்தது.

2011 சட்டசபைத் தேர்தல்
இதற்கு அடுத்து வந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 இடங்களில் தேமுதிக போட்டியிட்டது. இதில் 29 இடங்களை வென்றது. கிடைத்த வாக்குகள் 7.88 சதவீதமாகும். இதனால் இம்முறையும் அதன் அங்கீகாரம் தப்பியது.

2014 லோக்சபா தேர்தல்
2014 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. இதில் அக்கட்சிக்கு பெரும் தோல்வியே கிடைத்தது. வாக்குகளும் கிட்டத்தட்ட 6 சதவீத அளவிலான வாக்குகள் கிடைத்தன.

இப்போது ரொம்பக் கேவலம்
இந்த நிலையில் 2016 சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவின் நிலை ரொம்பக் கேவலமாகி விட்டது. வெறும் 2.4 சதவீத வாக்குகளைத்தான் அது பெற்றுள்ளது. இதனால் அங்கீரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தை அது இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் பதிவான வாக்குகளில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றால்தான் மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக
தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்த பின்னர் இப்போதுதான் முதல் முறையாக அங்கீகாரம் பறிபோகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications