கருணாநிதி புயல்... ஜெயலலிதா சூறாவளி...: குத்திப்பேசிய விஜயகாந்த்
விழுப்புரம்: ''பிழைப்புக்காக அரசிய லுக்கு வரவில்லை; மக்களுக்கு உழைக்கவே வந்துள்ளேன்,'' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கூறியுள்ளார். மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதில், கருணாநிதி புயல் என்றால், ஜெயலலிதா, சூறாவளியாக செயல்படுகிறார் என்றும் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.
விழுப்புரம் தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர், உமாசங்கரை ஆதரித்து, நேற்று மாலை விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், விஜய காந்த் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில், விழுப்புரம் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. இங்கு தொழிற்சாலைகள் இல்லாததால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள், இப்பகுதி மக்களை ஏமாற்றி வந்துள்ளன. நான் ஜாதி, மதம் பார்க்காமல், மக்களுக்கு பணி செய்து வருகிறேன்.
பிழைக்க வரவில்லை
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, 30 ஆயிரம் நகைத் தொழிலாளர்களுக்கு, ஜெயலலிதா அரசு எதையும் செய்யவில்லை. அரசியலுக்கு நான் பிழைக்க வரவில்லை; உழைக்கவே வந்துள்ளேன். 'இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வோம்' என்ற கொள்கையுடன் செயல்படுகிறேன்.
விலைவாசி உயர்வு
தொடர் மின் நிறுத்தம், விலைவாசி உயர்வால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை, மத்திய அரசே கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்லை. மாநில அரசும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக்கட்டுப்படுத்தலாம்.
சட்டம் ஒழுங்கு சமம்
ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் செல்லும் வாகனங்களை, யாரும் பரிசோதனை செய்வதில்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை, தேர்தல் அதிகாரிகள் உணர்ந்து, அனைவரையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதில், கருணாநிதி புயல் என்றால், ஜெயலலிதா, சூறாவளியாக செயல்படுகிறார்.
பொய், பித்தலாட்டம்
தமிழக மக்களின் நலனுக்காக, முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்திக்காதது ஏன்? கடந்த, 2004ல் அ.தி.மு.க.,விற்கு கொடுத்த படுதோல்வியை, மீண்டும் தமிழக மக்கள் அக்கட்சிக்கு வழங்க வேண்டும். அ.தி.மு.க.,வினர் மக்கள் பணி செய்யாததால், பொதுமக்கள் அக்கட்சி வேட்பாளர்களை ஊருக்குள் நுழைந்து பிரசாரம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பொய், பித்தலாட்டமே, அ.தி.மு.க.,வின் மூலதனமாக உள்ளது.
பாடம் புகட்டுங்கள்
மின்வெட்டினால் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் யாரும் படிக்க முடியவில்லை. மின்சார துறை அமைச்சராக இருக்கும் நத்தம் விஸ்வநாதன், 2012 ஜூன் மாதத்தில் இருந்து வானத்தில் கூட மின்வெட்டு இருக்கும், ஆனால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்றார். ஆனால் இப்போது தொடர்ந்து மின்வெட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு.
லஞ்சத்தை ஒழிப்போம்
தமிழகத்தில் லஞ்சத்தை ஒழிக்க நாங்கள் இருக்கிறோம். எங்கள் கூட்டணி முதல் கூட்டணி, வெற்றிக்கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. அ.தி.மு.க., தி.மு.க.விடம் இருந்து தமிழக மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்கு தான் நாங்கள் கூட்டணி சேர்ந்துள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே தமிழக மக்களை நிம்மதியாக வாழ வைக்க முடியும்.
ஜெயலலிதா சொத்து குவிப்பு
தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் வி.பி.ஈசுவரனை ஆதரித்து பேசிய விஜயகாந்த், ஊழல் பற்றி பேசுறாங்க...1991-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடி, ஆனால் 1996-ல் அவரது சொத்து மதிப்பு ரூ.64 கோடி. இப்போது அவர்கள் சொத்து எவ்வளவோ இருக்கிறது.
ஓட ஓட விரட்டுங்கள்
தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை. அதனால் தான் நான் கட்சி தொடங்கினேன். வருகிற தேர்தலில் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் ஓட, ஓட விரட்ட வேண்டும் என்றார்.