திருப்பூரை கொ.ம.தே.க.வுக்கு கொடுத்ததற்கு தேமுதிக கடும் எதிர்ப்பு- தொண்டர் தீக்குளிக்க முயற்சி
திருப்பூர்: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு திருப்பூர் தொகுதியைக் கொடுத்ததற்கு தேமுதிகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இன்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே சேலம் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கியதற்காக பாமகவினர் அங்கு போராட்டத்தில் குதித்தும், தீக்குளிப்பு முயற்சியிலும் ஈடுபட்ட நிலையில் இன்று திருப்பூரில் தேமுதிகவினர் கொங்குநாடு கட்சிக்கு எதிராக தீக்குளிப்பில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள தே.மு.தி.க. வடக்கு மாவட்ட அலுவலகம் முன்பு கூடிய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் மற்றும் தொண்டர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தொகுதி கொ.ம.தே.க.விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சி நிர்வாகிகள், திருப்பூர் தொகுதியை தே.மு.தி.க.வுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, தே.மு.தி.க.வை சேர்ந்த லட்சுமணன் என்ற தொண்டர், தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி மீட்டனர்.
இதையடுத்து தே.மு.தி.க. நிர்வாகிகளின் அவசர கூட்டம் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் சந்திரசேகர், பொருளாளர் தங்கவேல், துணைச் செயலாளர் கோவிந்த்ராஜ், செந்தில், குழந்தை வேல் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி கழக செயலாளர்கள் என நிர்வாகிகள் 60 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.