என்னை சின்னப்பையன்னு நினைச்சுடாதீங்க! காதுகுத்து விழாவில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விறுவிறு!
மயிலாடுதுறை: தன்னை யாரும் சின்னப் பையன் என்று நினைத்துவிட வேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பேசியிருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல காதுகுத்து விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார். தாம் 90ஸ் கிட்ஸ் என்பதால், 90ஸ் கிட்ஸும் - 2கே கிட்ஸும் தன்னை ஆதரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், பேசிய அவர் இதுவரை விஜயகாந்த் அரசியலை பார்த்திருப்பீர்கள், பிரேமலதா அரசியலை பார்த்திருப்பீர்கள் அவர் இருவரின் கலவையாக தாம் செய்யப்போகும் அரசியலை இனி பார்க்கப் போகிறீர்கள் என கட்சித் தொண்டர்கள் மத்தியில் பூஸ்ட் அப் கொடுத்தார்.
விஜயகாந்த் நன்றாக இருப்பதாகவும் குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் எனவும் தெரிவித்தார். விஜயகாந்தை போன்ற ஒரு ஆளுமை மிக்க தலைவரை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது என பேசிய அவர் சினிமா படத்தில் பேசுவதை போலவே இன்னும் பல்வேறு கருத்துக்களை கூறினார். முன்னதாக காதணி விழா செல்வங்களான தேமுதிக நிர்வாகியின் இரண்டு குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்தை பரிசளித்தார்.

இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட தேமுதிக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதால் விஜயபிரபாகரன் சற்று உற்சாகமாக காணப்பட்டார். திமுக, அதிமுகவினர் எல்லாம் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்து நலப்பணிகள் செய்வதில்லை என்றும் தேமுதிக மட்டுமே சொந்த நிதியிலிருந்து நலப்பணிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மற்ற கட்சிகளை போல் தேமுதிக கிடையாது என்றும் தேமுதிகவில் மாவட்டச் செயலாளர் தொடங்கி ஒன்றியச் செயலாளர் வரை எல்லோரும் சாமானியர்கள் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications