2016-ல் தே.மு.தி.க. ஆட்சி அமைக்குது... பூரண மதுவிலக்கை கொண்டு வருது.. விஜயகாந்த் 'அசால்ட்'
திருவள்ளூர்: தமிழகத்தில் 2016ல் தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பூரண மதுவிலக்கு கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் முதல்வர் மவுனம் காப்பாது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களுக்காக மக்கள் பணி என்ற நிகழ்ச்சியை தே.மு.தி.க. வருடந்தோறும் நடத்தி வருகிறது. சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மக்கள் பணி நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட தேமுதிக அதற்கான பிள்ளையார் சுழியை திருவள்ளூரில் போட்டுள்ளது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கும்மிடிப்பூண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 100 மீன்பிடி தொழிலாளர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வழங்கினார்.

முதல்வரின் மவுனம்
விழாவில் பேசிய விஜயகாந்ர், பூரண மதுவிலக்கு கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் முதல்வர் மவுனம் காப்பாது நியாயமா?.

பூரண மதுவிலக்கு
மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய அரசாங்கமே தண்ணீரை பாட்டில் அடைத்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்வது சரியல்ல என்று கூறிய விஜயகாந்த் வருகின்ற 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க. ஆட்சியமைக்கும். அப்போது, பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்" என்றார்.

தடுத்த மழை
இந்த விழா தொடங்கும் முன்பே கடும் மழை பெய்ததால் தே.மு.தி.க தொண்டர்கள் அனைவரும் சேர்களை குடையாக பிடித்து கொண்டு தங்களது தலைவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்க காத்திருந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே தனது பேச்சை முடித்துக் கொண்ட விஜயகாந்த், நான் அதிகம் பேச வேண்டும் என்று தான் இங்கு வந்தேன். மழையால் சிறிது நேரம் மட்டுமே பேசிவிட்டு செல்கிறேன் என்றார்.

பிரேமலதா விளாசல்
கூட்டத்தில் பேசிய பிரேமலதா, தண்ணீர் பிரச்சினையை தீர்ப்போம் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று தமிழகம் முழுவதும் அம்மா தண்ணீர் பாட்டில் விற்பதற்காக கும்மிடிப்பூண்டியில் ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகின்றனர் என்றார்.

மணல் கொள்ளை
கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. திருவள்ளூர் மாவட்டத்தில்தான் அதிகளவு மணல் கொள்ளை நடக்கிறது.

தேமுதிக கைப்பற்றும்
கல்வி, குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்த தர வேண்டிய அரசாங்கம் மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வம் காட்டுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தேமுதிக கைப்பற்றும் என நம்பிக்கை உள்ளது என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications