அமைச்சர் வரும்போதுதான் ப்ளீச்சிங் பவுடர் அடிக்கிறாங்க.. பிரேமலதா பாய்ச்சல்
திருவள்ளூர்: மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையே சுத்தமாக இல்லை. பல நோயாளிகளுக்கு கொசு வலை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை இன்று காலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
இதன் பின்னர் பிரேமலதா செய்தியார்களிடம் கூறியதாவது: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையே சுத்தமாக இல்லை. பல நோயாளிகளுக்கு கொசு வலை வழங்கப்படவில்லை.
பல்வேறு கிராமங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ள நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது மட்டும் பிளிச்சிங் பவுடர் தெளிப்பது, நோயாளிகளுக்கு கொசுவலை கொடுப்பது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர்கள் செய்வது வெறும் கண்துடைப்பு நாடகமே.
மக்களும், அரசும் இணைந்து செயல்பட்டால் தான் நோய் பரவுவதை கட்டுப்படுத்த இயலும். நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இதனை மறக்காமல் ஆளும் அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைப்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார்.
ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications