திமுகவின் ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதியை வாங்காமக் இழுத்தடிக்கும் அதிமுக அரசு!
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் காசோலையை பெற்றுக்கொள்ளாமல் தலைமைச் செயலக அதிகாரிகள் தட்டிக் கழித்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த பதினைந்து நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரில் பங்கேற்கும் வகையில்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் வழங்கப்படும் என்று நான் 17-11-2015 அன்று அறிவித்த பிறகு, தலைமைக் கழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் அலுவலகத்திற்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அந்தக் காசோலையை வழங்கிட நேரம் கேட்டும், அதனை வழங்குவதற்கு வாய்ப்பு தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்து வருகிறார்கள்.
இதிலிருந்து இந்த நிதியைப் பெறக் கூடாது என்று அவர்களுடைய மேலிடம் கட்டளையிட்டிருக்கிறதோ என்று கருத வேண்டியுள்ளது. இருந்தாலும், தொடர்ந்து கழகத்தின் சார்பில் அந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்குவதற்கு நேரம் கேட்கப்பட்டு வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட துயர் துடைப்பு நிதி வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதற்கு இது தான் காரணம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.