கருணாநிதி மறைவால் வாடுகிறேன்.. துக்கம் தாங்கலை.. எழுதி வைத்து விட்டு தொண்டர் தற்கொலை
கோவையில் திமுக தொண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
கோவை: கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதிவைத்து விட்டு தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திமுக தலைவரை நேசிப்பவர்கள் பலர். அதனால்தான் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நாளிலிருந்து தற்போது வரை ஏராளமானோர் உயிரை பலி கொடுத்துள்ளனர். கருணாநிதி குறித்த செய்திகளால், அதிர்ச்சி மரணம், மாரடைப்பு, தற்கொலை, என பலவிதங்களில் இந்த தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போதுகூட கோவையில் ஒரு திமுக தொண்டர் உயிரிழந்துள்ளார். கணபதி பாரதி நகரை சேர்ந்த இந்ததொண்டர் பெயர் முத்துசாமி. 58 வயதான முத்துசாமி தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக இருந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற முத்துசாமி, இரவு வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை.
இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் முத்துசாமியை தேட ஆரம்பித்தனர். கடைசியில் பாரதி நகரிலேயே சாலை ஓரம் ஒன்றில் விழுந்து கிடப்பதாக சிலர் பார்த்துவிட்டு சொன்னார்கள். இதையடுத்து அங்கு உறவினர்கள் ஓடிச்சென்று பார்த்தால், முத்துசாமி விஷத்தை குடித்துவிட்டு விழுந்துள்ளது தெரியவந்தது. உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் சிகிச்சை அளித்தும் முத்துசாமி இறந்துவிட்டார்.
இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் விசாரணையை துவக்கினர். அப்போது அவரது சட்டையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், "தனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதி வைத்திருந்தார் முத்துசாமி.