திமுக வேட்பாளரை மாற்றக்கோரி தீக்குளிப்பு: துரைமுருகன் உருவபொம்மை எரிப்பு
சென்னை: திமுக வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீக்குளிப்புகளும், உருவபொம்மை எரிப்புகளும் பல தொகுதிகளில் அரங்கேறி வருகின்றன.
நாகை மாவட்டம், சீர்காழி தொகுதியில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த கிள்ளை ரவீந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான திமுகவினர் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சீர்காழி தொகுதியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், ரவிச்சந்திரன், கிருஷ்ணசாமி, மதி, சேகர் ஆகிய 4 தொண்டர்கள் கையில் வைத்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி, வேட்பாளரை மாற்றாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக கோஷமிட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்களிம் இருந்த பெட்ரோல் கேன்களை பறித்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேட்பாளரை மாற்றும்வரை உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஜோலர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மகளிர் அணி வேலூர் (மே) மாவட்ட தலைவி கவிதா தண்டபாணியை திமுக தலைமை அறிவித்தது.
இதனால் ஆத்திரமடைந்த ஜோலர்பேட்டை தொகுதியை சேர்ந்த திமுகவினர் மாற்று தொகுதி யை சேர்ந்த வேட்பாளரை அறிவித்ததை ஏற்க முடியாது எனக்கூறி 100 க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் வாணியம்பாடியில் உள்ள வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தேவராஜ் அலுவலகம் எதிராக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். கூட்டத்தில் இருந்த தி.மு.க தொண்டர்கள் கந்தசாமி, சார்லஸ் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் மாவட்ட செயலாளர் தேவராஜ் அச்சமயம் அலுவல கத்தில் இல்லை என்று தெரிய வந்தது எனவே இது சம்பந்தமாக மாலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று திமுக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று மற்ற தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பாலவாக்கம் திமுக கவுன்சிலர் தலைமையில் ஏராளமான திமுகவினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துரைமுருகனின் உருவபொம்மையை எரித்த அவர்கள், துரைமுருகன் 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று விட்டதாக குற்றம் சாட்டினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடித் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட டாக்டர் சதீஸ் என்பரை கட்சி தலைமை அறிவித்தது. அறிவிப்பு வெளியானது முதல் தொகுதியில் பல கிராமங்களிலும் போராட்டம் வெடித்தது. புதன்கிழமையன்று ஆலங்குடியில் பிரமாண்ட பேரணி நடத்தி தீ குளிக்க முயன்று கட்சி அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆலங்குடித் தொகுதியில் உள்ள தி.மு.க வினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கீரமங்கலம் மெய்நின்ற நாதர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிவனிடமே நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நீதியின் பக்கம் நின்ற புலவர் நக்கீரரிடம் மனு கொடுத்து நீதி கேட்டு நக்கீரா.. நீதி சொல்.. என்று கோஷமிட்டனர்.