ராஜ்யசபா தேர்தல்: ஸ்டாலின், கனிமொழி முன்னிலையில், திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மொத்தம் 15 மாநிலங்களில் இருந்து வரும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலாவதியாக உள்ளது.
மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் தமிழகத்திலும் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பதவி வரும் ஜுன் 29ல் காலியாக உள்ளன. ஜூன் 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த பதவி இடங்களுக்கு, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். ஒரு ராஜ்யசபா எம்பிக்கு, 34 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு தேவை. அதிமுக வைத்திலிங்கம், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 4 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மற்றும் செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்கள்.
இவ்விருவரும், சட்டசபை செயலாளரும், தேர்தல் பொறுப்பாளருமான ஜமாலுதீனிடம் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது, ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் ஆகிய திமுக முக்கிய தலைவர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டசபையில் மக்கள் பிரச்சினைகளுக்காக திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications