கருணாநிதிக்கான செயற்கை உணவுக் குழாய் மாற்றும் சிகிச்சை நிறைவு- மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை உணவு குழாய் மாற்றும் சிகிச்சை முடிவடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
கருணாநிதி கடந்த 7 மாதங்களாக முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது.
மீண்டும் அனுமதி
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி, மகன் தமிழரசு ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
உணவு குழாய் மாற்றம்
இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, கருணாநிதிக்கு பொருத்தப்பட்ட உணவு குழாயை மாற்றவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மணிநேரங்களில் வீடு திரும்புவார் என கூறியிருந்தார்.
|
சிறிய சிகிச்சை
அதேபோல் காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், சிறிய அளவிலான சிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தொண்டையில் உள்ள குழாய் மாற்றப்பட்டதும் இன்றே வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வீடு திரும்பினார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கருணாநிதிக்கு செயற்கை உணவு குழாய் மாற்றும் சிகிச்சை முடிவடைந்தது. பின்னர் வழக்கமான பரிசோதனைகளைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோபாலபுரம் வீடு திரும்பினார்.