மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறை, திருநங்கைகளுக்கு வாரியம் கண்ட கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி துறையையும் 3ம் பாலினத்தவர்களுக்கு தனி வாரியத்தையும் தனது காலகட்டத்தில் தொடங்கியவர்.
சென்னை: விமர்சனங்கள் பல இருந்தாலும் சமூக சீர்திருத்தங்களுக்கும் அடிக்கோடிட்ட அரசியல்வாதி என்று கருணாநிதியை சொல்வதற்கு காரணமாக அமைந்தது மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட தனித்துறை மற்றும் திருநங்கைகளுக்கான தனி வாரியம்.
மனித சமுதாயத்தில், காது கேளாதவராய், கண் தெரியாதவராய், வாய்பேச முடியாதவர்களாய், கை கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய், மன நோயாளிகளாய் உள்ள அனைவரையுமே "ஊனமுற்றோர்" என்பதற்குப் பதிலாக, "மாற்றுத் திறனாளிகள்" என்று அழைக்கின்ற முறை குறித்து 2007-ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையில் விவாதிக்கப்பட்டது.
அந்த விவாதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் "ஊனமுற்றோர்" என்ற சொல் ஒழிக்கப்பட்டது. அன்று முதல் உடல் ஊனமுற்றவர்கள் இனி, "மாற்றுத் திறனாளிகள்" என அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் துறை
இதனைத் தொடர்ந்து 19.3.2010 அன்று தி.மு.க கழக ஆட்சியில், 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முதல்வரின் நேரடிப் பார்வையில் இயங்கும் "மாற்றுத் திறனாளிகளுக்கான தனித் துறை " அறிவிக்கப்பட்டு அன்றே அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், துறையின் பெயரும், அலுவலகம் மற்றும் அலுவலர்கள் பெயர்களும் மாற்றி அமைக்கப்பட்டன.

உதவித்தொகை
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு முறையும் கடைபிடிக்கப்பட்டது. மேலும் மாற்றுத் திறனாளியை இன்னொரு மாற்றுத் திறனாளியை திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் கருணாநிதி தலைமையிலான அரசு 2009-2010ஆம் ஆண்டு அறிவித்தது.

நலவாரியம்
இதே போன்று 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘அனைத்துச் சமுதாயத்தினராலும், ஒதுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள அரவாணிகளின் நலன்களைப் பாதுகாக்கத்தக்க வகையில், அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து முடிவுகள் மேற்கொள்வோம்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருநங்கைகளுக்கு உரிமை
இதன் அடிப்படையில் தி.மு.க. ஆட்சியில் 15-4-2008 அன்று ‘தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்' தொடங்கப்பட்டு, அரவாணிகள் கணக்கெடுக்கப்பட்டு, அடையாள அட்டை, குடும்ப அட்டைகளும், தொகுப்பு வீடு மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மேலும் அரவாணிகள் என்ற அழைக்கப்பட்டவர்களுக்கு திருநங்கைகள் என்று அழைக்கும் முறையையும் கருணாநிதி அறிமுகப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications