அதெப்படி சைட் தொடங்கலாம்.. ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மீது தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்
ஆர்.கே நகர் இணையதளம் தொடங்கியதற்காக ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மீது தி.மு.க தேர்தல் விதிமீறல் புகார் அளித்து உள்ளது.
சென்னை : ஆர்.கே நகர் மக்கள் குறைகளைத் தெரிவிக்க புதிய இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர், துணை முதல்வர் மீது தி.மு.க தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளது.
ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அ.தி.மு.க சார்பில் மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இவருக்கு ஆதரவாக அ.தி.மு.க தலைவர்கள் தொகுதியில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய பிரச்சாரத்தில் ஆர்.கே நகர் தொகுதி மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக www.rknagar.in என்கிற இணையதளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில், தேர்தல் சமயத்தில அரசின் முக்கிய பதவிகளின் இருப்பவர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தவறு என்றும், இது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும், வாக்காளர்களை கவரவே அந்த இணையதளம் தொடங்கப்பட்டதாகவும், தேர்தல் விதிகளை மீறியதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது .