For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சர் வீரமணியை ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேற்றுங்கள்: தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

By Siva
Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் தேர்தல் விதிகளை மீறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணியை தொகுதியை விட்டு வெளியேற்றக் கோரி திமுக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ஸ்ரீரங்கம் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு அதிகாரிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

DMK complaints to CEO about minister Veeramani

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

ஸ்ரீரங்கத்தில் நடக்கும் இடைத்தேர்தலையொட்டி அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அங்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தனது பொறுப்பை தவறாக பயன்படுத்தி பள்ளி மாணவ, மாணவிகளை தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்து வரும்படி அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வைத்துள்ளார். இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிகளை அவர் மீறியுள்ளார். தேர்தல் நடத்தை விதியின்படி, தடை செய்யப்பட்டுள்ள அரசு எந்திரத்தையும், அலுவலர்களையும் அமைச்சர் பயன்படுத்தியுள்ளார்.

புங்கனூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பள்ளி குழந்தைகள் சீருடைகளுடன் வந்து அ.தி.மு.க. கட்சியின் கொடிகளைக் கைகளில் பிடித்தபடி உள்ளனர். அவர்கள் அருகே அமைச்சர் நிற்கிறார். இந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

எனவே, ஸ்ரீரங்கத்தில் தேர்தலில் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதியில், "மத்தியிலோ, மாநிலத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாநிலங்களிலோ அதிகாரத்தில் உள்ள கட்சி, தனது அதிகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாக எந்த புகாருக்கும் இடமளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் தங்கள் அதிகாரபூர்வ வருகையை தேர்தல் பிரசாரத்தோடு இணைக்கக் கூடாது. மேலும் அரசு எந்திரத்தை அல்லது அலுவலர்களைத் தேர்தல் பணிகளில் பயன்படுத்தக்கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக அமைச்சர் கே.சி.வீரமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை ஸ்ரீரங்கம் தொகுதியை விட்டு வெளியேற்ற உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK has sent a written complaint to chief electoral officer about minister KC Veeramani who allegedly violated the code of conduct.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X