திருச்சி திமுக மாநாடு: கருணாநிதிக்காக கட்டப்படும் காட்டேஜ்

திருச்சியில் பிப்ரவரி 15 மற்றும் 16ம் தேதிகளில் திமுக 10வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் திருச்சி திமுக மாவட்டச் செயலாளர் கே.என். நேரு தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மாநாட்டை முன்னிட்டு திருச்சி தீரன் நகரில் 250 ஏக்கர் பரப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 200 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாநாட்டின் முகப்பு வாயில் டெல்லி செங்கோட்டை வடிவிலும், மேடையின் உட்புற அமைப்பு நாடாளுமன்ற தோற்றத்தையும் கொண்டவாறு அமைக்கப்படுகிறது. மேலும், மாநாடு நடைபெறும் பகுதியில் சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் வரை நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாடு நடைபெறும் இடத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்குவதற்காக தனித் தனி காட்டேஜ் அமைக்கப்படுகிறதாம். இந்த காட்டேஜ்கள் சொகுசு பங்களா போன்று அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி கட்டப்படுமாம். கருணாநிதியின் உடல் நிலை காரணமாகவே அவருக்கு சிரமம் இருக்க கூடாது என்பதற்காக மாநாடு மேடை அருகே பிரமாண்ட காட்டேஜ் கட்டப்படுவதாக திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இந்த மாநாட்டில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 10 முதல் 15 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகின்றது. மாநாட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications