திமுக படுதோல்வி… கட்சிக்குள் அழகிரி மீண்டும் ரீ என்ட்ரி ஆவாரா?
சென்னை: திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. தென்மாவட்டங்களில் மட்டுமே திமுகவிற்கு சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது திமுக.
இந்த தோல்வியை மதுரையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடியுள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள். ஆனால் நான்வெற்றியோ, தோல்வியோ அடையவில்லை என்று கூறியுள்ளார் அழகிரி.

அழகிரி இல்லாவிட்டால் திமுகவால் வெற்றிபெற முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவே அழகிரி மீண்டும் திமுகவிற்குள் ரீ என்ட்ரி ஆகும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
போஸ்டர் யுத்தம்
கடந்த ஜனவரி மாதம் மு.க.அழகிரி பிறந்தநாளின்போது, அவரது ஆதரவாளர்கள் மதுரை நகர் முழுவதும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டினார்கள். இதனால், அதிருப்தியடைந்த தி.மு.க. தலைமை, மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் சிலரை கட்சியை விட்டு நீக்கியதுடன், மதுரை மாநகர் தி.மு.க.வையும் கூண்டோடு கலைத்தது.
அழகிரி கண்டனம்
இதனால், அதிருப்தி அடைந்த மு.க.அழகிரி, ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து, தனது ஆதரவாளர்களை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால், தி.மு.க. தலைமையோ மு.க.அழகிரியையும் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது. மேலும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளர் என்ற பொறுப்பையும் வாபஸ் பெற்றது.
அதிருப்தியில் அழகிரி
இதனால், தி.மு.க. தலைமை மீது அதிருப்தியிலேயே மு.க.அழகிரி இருந்து வந்தார். இந்த நிலையில், மு.க.அழகிரி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கையும், பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்து பேசினார். பின்னர், சென்னையில் நடிகர் ரஜினிகாந்தையும் அவர் சந்தித்தார்.
நிரந்தரமாக நீக்கம்
மு.க.அழகிரியின் நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்த தி.மு.க. தலைமை, அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த மாதம் (மார்ச்) 25-ந் தேதி ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையின் முடிவில், தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்குவது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
வாஷ்அவுட் ஆன திமுக
திமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையவேண்டும் என்றும் மூன்றாவது, நான்காவது இடத்திற்கு தள்ளப்படவேண்டும் என்றும் பகிரங்கமாகவே கூறிவந்தார் அழகிரி. அவர் சொன்னதைப் போல திமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
மீண்டும் திமுகவில் அழகிரி
இந்த தோல்விக்குப் பின்னர் கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு திமுகவிற்குள் மீண்டும் நுழையலாம் என்று அழகிரியின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதற்கு வழிவிடுவாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
மீண்டும் திரும்பிய 2001
கடந்த 2001ம் ஆண்டு அழகிரி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது திமுகவிற்கு எதிராக செயல்பட்டார். அதுவே அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க காரணமாக அமைந்தது. அதேபோன்றதொரு நிலை தற்போது திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications