ஆட்சியை கலைக்க திமுக முயற்சிக்கவில்லை.. அதுதானாக கவிழும் - ஸ்டாலின் பேச்சு
அதிமுக ஆட்சியை கவிழ்க்க துளியளவு கூட திமுக முயற்சிக்கவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஆட்சியை கவிழ்க்க திமுக முயற்சிக்கவில்லை. அதிமுகவினரே ஆட்சியை கவிழ்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி சார்பில் சென்னை பாரிமுனையில் கருணாநிதி வைர விழா மற்றும் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியதாவது: நேற்றைய தினம் 'டைம்ஸ் நவ்' என்ற ஆங்கில தொலைக்காட்சியில் பரபரப்பாக செய்தி வெளியானது. அந்த செய்தி பற்றி அந்த தொலைக்காட்சியில் இருந்து என்னுடைய கருத்தை கேட்டபோது, 'எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தான் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம். விதிமுறைகளை சுட்டிக்காட்டி உரிமையோடு கேட்டோம். முடிந்த வரையில் போராடினோம்.
ஆனால், இந்த ஆட்சியாளர்கள் காவல்துறையினரை பயன்படுத்தி எங்களை எல்லாம் அடித்து, துன்புறுத்தி, வெளியில் தூக்கிக் கொண்டு வந்து போட்டார்கள். அதன் பிறகு ஆளுநரை சந்தித்தோம், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டோம். அப்போது நாங்கள் தெரிவித்தவை எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்பது இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது' என்று தெரிவித்தேன்.
அதிமுகவினர் இரு அணிகளாக, மூன்றாகப் பிரிந்திருந்தாலும், கொள்ளையடிப்பதில் கூட்டுச்சதி செய்து பல அக்கிரமங்களை இவர்கள் செய்திருப்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. என்மீது கூட சிலருக்கு கோபம் உள்ளது. நமது தோழர்களுக்கே கொஞ்சம் ஆத்திரம் இருக்கிறது. இந்த ஆட்சியை இப்படியே விட்டு வைத்திருக்கிறீர்களே, இதற்கொரு முடிவு கட்டக்கூடாதா? என்று எங்கு சென்றாலும் கேட்கிறார்கள். எனக்கு அருகில் இருப்பவர்களே இந்த ஆதங்கத்தை அடிக்கடி வெளிப்படுத்துவதுண்டு. நான் கருணாநிதியின் மகன். அவர் வகுத்த பாதையை தான் பின்பற்றுவேன்.
இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். நான் ஒரே வரியில், ஆட்சியை கவிழ்க்க துளியளவு கூட நாங்கள் முயற்சிக்கவில்லை. காரணம், அவர்களே ஆட்சியை கவிழ்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று பதிலளித்தேன். அது நேற்றிலிருந்து தொடங்கி இருக்கிறது. நாளையா? நாளை மறுநாளா? அல்லது இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்பே நடக்குமா? என்ற நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.