மாஜி எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா உள்ளிட்ட அழகிரி ஆதரவாளர்கள் 10 பேர் திமுகவில் இருந்து நீக்கம்
சென்னை: மு.க. அழகிரி ஆதரவாளர்கள் 10 பேர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவர்கள் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி மு.க. அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து முன்னாள் துணை மேயர் மன்னர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் சந்தித்து பேசினர்.
இந்நிலையில் திமுகவில் இருந்த அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களின் செயல்பாடு குறித்து கட்சி தலைமைக்கு புகார் சென்றுள்ளது.

இதையடுத்து அழகிரியின் ஆதரவாளர்களான மதுரையைச் சேர்ந்த 10 பேர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை மாநகர் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.எம்.கருப்பசாமி, டி.சுப்புலட்சுமி மற்றும் எம்.உதயகுமார், மிசா எம்.பாண்டியன், என்.சிவக்குமார், ப.கோபிநாதன், வி.என்.முருகன், ஆர்.எஸ்.ராமலிங்கம், க.இசக்கிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கவுஸ்பாட்சா ஆகிய 10 பேர் கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் திமுகவுக்கு எதிராக செயல்படுவதாக அறியப்படுகிறது.
எனவே, இவர்கள் அனைவரும் திமுக உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications