9 பேர் கூடி "ரெடி" செய்த 100 பக்க திமுக தேர்தல் அறிக்கை!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாராகி விட்டது. அதனை அக்கட்சித் தலைவர் கருணாநிதியிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் இன்று மாலை சமர்பித்தனர்.
சட்டசபைத் தேர்தலையொட்டி டி.ஆர்.பாலு தலைமையிலான 9 பேர் கொண்ட குழு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதன்பலனாக தற்போது 100 பக்கத்துக்கும் அதிகமான தேர்தல் அறிக்கை தயாராகி விட்டதாகத் தெரிகிறது.

தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதியிடம் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சமர்பித்தனர். பின்னர் அது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
திமுகவைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கைதான் ஹீரோவாக இருக்கும். கடந்த 2006 தேர்தலில் கூட திமுகவின் தேர்தல் அறிக்கைதான் திமுக ஆட்சியைக் கைப்பற்ற உதவியது. இந்த வகையில் இப்போதும் திமுக தேர்தல் அறிக்கை குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் அவற்றிற்கான தொகுதிகள் குறித்து இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்து ஆலோசனை நடந்து வருவது தெரிகிறது.
எனவே, கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டவும், தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திமுகவில் காங்கிரஸிற்கு 41 தொகுதிகளும், ஜவாஹிருல்லாவின் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப்படை ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுபோக மீதமுள்ள 176 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications