ஜனவரி 9-ல் தி.மு.க. பொதுக் குழு: 11-வது முறையாகத் தலைவராகிறார் கருணாநிதி!
சென்னை: தி.மு.க.வின் பொதுக் குழு வரும் வரும் 9-ந் தேதி கூட உள்ளது. இதில், தி.மு.க. தலைவராக கருணாநிதி 11-வது முறையாக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.
தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க. வின் 14-ஆவது பொதுத் தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ஜனவரி 9-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இதில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறும்.
தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும்.
இவ்வாறு அன்பழகன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
தி.மு.க.வின் 14-ஆவது உள்கட்சித் தேர்தலில் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது. தி.மு.க.வில் மொத்தம் 84.38 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
65 மாவட்டச் செயலாளர்கள், 129 நகரச் செயலாளர்கள், 587 ஒன்றியச் செயலாளர்கள், 1.12 லட்சம் வார்டுகளுக்கானத் தேர்தல் நடைபெற்று முடிந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொதுக்குழுவில் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் என்று அறிவிக்கப்பட்டாலும், அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வின் தலைவராக இருந்து வரும் கருணாநிதி 11-வது முறையாக மீண்டும் தலைவராகத் தேர்வு செய்யப்பட உள்ளார். பொதுச் செயலாளராக க.அன்பழகன் 10-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பொருளாளராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அதே நேரத்தில் க. அன்பழகனை கட்சியின் ஆலோசகராகவும் மு.க.ஸ்டாலினை பொதுச்செயலராகவும் நியமிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. கருணாநிதி அழைத்தால், மு.க.அழகிரியும் வருவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications