தமிழக சட்டப்பேரவை: எதிர்கட்சிகள் பேச அனுமதி மறுப்பு: திமுக அமளியால் வெளியேற்றம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும், மாநிலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர, அவைத் தலைவர் தனபாலனிடம், திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் மறுத்துவிட்டார். கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் திமுக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அவைக்கு வெளியே வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கியிருக்கிறது. திமுக உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகளை மையமாக வைத்து ஒத்திவைப்பு தீர்மானங்கள், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் நாங்கள் சபாநாயகரிடம் தந்துள்ளோம். இதுவரை எந்தவொரு ஒத்திவைப்பு தீர்மானங்களும், கவன ஈர்ப்பு தீர்மானங்களும் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
மக்கள் பிரச்சினை
மக்களுடைய பிரச்சனைக்கு முக்கியத்துவம் தராமல், சட்டமன்றத்தை பொறுத்தவரையில் கேள்வி நேரமாக இருந்தாலும் சரி, 110 அறிக்கையை படித்து அதன்பிறகு பேசக் கூடிய ஆளுங்கட்சி ஆதரவு உறுப்பினர்கள் பேசக் கூடிய சூழலும், மானிய கோரிக்கைக்கு பதில் அளித்துப் பேசக்கூடிய அமைச்சர்களும் முதல்அமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவை புகழ்பாடுவதையே மையமாக வைத்து தொடர்ந்து சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
விலைவாசி உயர்வு
இன்று, மக்களின் அடிப்படை பிரச்சனையாக இருக்கக் கூடிய விலைவாசி ஏற்றம், கட்டுமானப் பொருட்களின் பிரச்சனை, வறட்சி நிலவரம், குடிநீர் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளையெல்லாம் நாங்கள் எழுதிக்கொடுத்திருக்கிறோம். எனவே அதில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினோம். எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
காய்கறி விலை உயர்வு
விலைவாசி விண்ணை முட்டக் கூடிய அளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வறச்சி நிலவிக்கொண்டிருக்கிறது. குடிநீர் தட்டுப்பாட்டில் மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதுகுறித்து தான் அரசிடம் விளக்கம் கேட்க, இந்த பிரச்சனையை எடுத்துச் சொல்ல விரும்பினோம். அதற்கு அனுமதி தரப்படவில்லை என்றார்.
டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு
இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார். பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிதம்பரத்தில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சிதம்பரம் சிறுமி கொலை வழக்கில் விசாரணை கோரி வெளிநடப்பு செய்ததாக கூறினார்.
கம்யூனிஸ்ட்கள் வெளிநடப்பு
சிதம்பரம் சிறுமி வழக்கில் விசாரணை கோரி கம்யூனிஸ்ட் கட்சியினரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தேமுதிக முழக்கம்
எதிர்கட்சியினருக்கு சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதைக் கண்டித்து தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் எதிர்கட்சியினர் யாருக்குமே தங்களுடைய கருத்தினை கூற வாய்ப்பு மறுக்கப்படுவதாக தெரிவித்தனர். அதிமுக அரசுக்கு எதிராக சட்டப்பேரவை முன்பு முழக்கமிட்டனர்.
கூண்டோடு வெளியேற்றம்
கேள்வி நேரத்திற்குப் பின்னர் அவையில் மீண்டும் திமுகவினர் கூடினர். அப்போது, அவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ராஜலட்சுமி, திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுகவினர் கூச்சலிட்டனர். தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், திமுகவினரை கூண்டோடு வெளியேறுமாறு அவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார்.
சர்வாதிகார சபாநாயகர்
அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக உறுப்பினர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவை அதிமுக விழா மேடை போல் இருப்பதாகவும், பேரவைத் தலைவர் அதிமுக கைப்பாவையாக மாறிவிட்டதாகவும் திமுக உறுப்பினர் துரை முருகன் குற்றம் சாட்டினார்.