“எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துடுச்சு.. மோடி, அமித்ஷா யாரும் உள்ளே வர முடியாது” - ஆ.ராசா பேச்சு
பெரம்பலூர்: "பாஜக தமிழ்நாட்டில் நுழைய முடியாததற்கு காரணம் மு.க.ஸ்டாலினும், கி.வீரமணியும் எல்லைச் சாமிகளாக இருப்பதுதான். எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது இருவரும் எல்லைச் சாமிகளாக இருக்கும் வரை மோடி, அமித்ஷா உள்ளிட்ட யாராலும் உள்ளே நுழைய முடியாது" என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்கள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெரம்பலூரில் திமுக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

ஆ.ராசா பேசுகையில், "பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்றைக்கும் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது என்பதை தான் அகிலேஷ் யாதவாக இருந்தாலும், மம்தா பானர்ஜியாக இருந்தாலும், கூட்டணி கட்சிகள் யாராக இருந்தாலும் எங்களிடத்தில் கேட்கிறார்கள். பாஜக இவ்வளவு தந்திரங்களை செய்து, இவ்வளவு பொய் வாக்குறுதிகளை கொடுத்து, மதவெறியைத் தூண்டி என்னென்னவோ செய்து, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ அத்தனையையும் வைத்து மிரட்டுகிறார்கள். இருப்பினும் அவர்கள் தந்திரம் தமிழ்நாட்டில் பலிக்கவில்லையே எப்படி எனக் கேட்கிறார்கள்.
அதற்கு காரணம் எல்லைச்சாமிகள் இருக்கிறார்கள். எங்களுக்கும் சாமி நம்பிக்கை வந்து விட்டது. 92 வயதில் கி.வீரமணி என்று ஒரு எல்லைச்சாமி இருக்கிறார். கோட்டையில் ஒரு எல்லைச்சாமி திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். இந்த இரண்டு எல்லைச்சாமிகள் தமிழ்நாட்டில் இருக்கும் வரைக்கும் பெரியார், அண்ணா, கலைஞர் எல்லோரும் உயிரோடு இருப்பதாக அர்த்தம். அதுவரைக்கும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட யாரும் உள்ளே வர முடியாது.
தத்துவத்திற்கு ஒரு தலைவர் 92 வயதில் இருக்கிறார். அந்தத் தத்துவத்தைக் கொண்டு ஆட்சி நடத்துகின்ற இன்னொரு தலைவர் 72 வயதில் இருக்கிறார். இன்னும் 2000 ஆண்டுகளுக்கு இந்த மண்ணில் இருந்து ஓட்டக்கூடிய வலிமை மிகுந்த அரசைத் தருவார்கள். இந்த ஆட்சி தொடர வேண்டும்" என ஆ.ராசா பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications