கேரள வெள்ள நிவாரணத்திற்கு ஒரு மாத ஊதியத்தை அளிக்கும் திமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள்!
சென்னை: கேரளா வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தலா ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என்று அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் கேரளாவுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 357 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இயற்கை பேரிடர் அம்மாநில உட்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் கேரள மாநில மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர கேரள மாநில கழக நிர்வாகிகளும், இங்குள்ள கழக தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக, கேரளாவில் நிகழ்ந்துள்ள இந்த மிகக் கடுமையான பேரிடரால் அம்மாநில மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற நேரத்தில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை "கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக" அளிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.