மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோல்மால் செய்திருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்
சென்னை: லோக்சபா தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோல்மால் செய்துதான் அதிமுகவினர் ஜெயித்திருக்கின்றனர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் நமக்கு தோல்வியில்லை. திமுக தோல்வியை எண்ணி துவண்டதில்லை, வெற்றியை எண்ணி வெறிகொண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.தென்னவன் இல்லத் திருமணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்,
இங்கு பேசியவர்கள் முடிந்த லோக்சபா தேர்தலைப் பற்றிப் பேசினார்கள். நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால், நடந்து முடிந்த தேர்தல், மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல். ஆனால் 2016-ல் வரவிருக்கும் தேர்தல் மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல் எனவே இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பான ஒன்று. நமது கழகத்தைப் போன்று எவரும் வெற்றியை கண்டவரும் இல்லை. தோல்வியை கண்டவரும் இல்லை. அதற்கு தான் அண்ணா அன்றே கூறினார் தி.மு.க.வினர் வெற்றியை கண்டு வெறிகொண்டு அலைபவரும் அல்ல. தோல்வியை கண்டு துவளுபவரும் அல்ல என்று கூறினார்.
எனவே நடந்து முடிந்த தேர்தலில் நாம் தோற்கவில்லை தமிழ் மக்கள் தான் தோற்றிருக்கிறார்கள். அதிலும் இந்த தேர்தலில் என்னென்ன சூட்சுமங்கள் நடந்திருக்கிறது என்று இரண்டு நாட்களுக்கு முன்பு எக்னாமிக் டைம்ஸ் என்ற டெல்லியிலிருந்து வெளிவரும் பத்திரிகையில் 28.6.2014 அன்று தலைப்பு செய்திகளாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மின்னணு வாக்கு இயந்திரங்களில் பல கோல்மால்கள் நடந்திருக்கிறது. அதற்கு ஆதாரமாக அசாமில் நடந்திருக்கும் தேர்தலில் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் எந்த பட்டனை அழுத்தினாலும், பி.ஜே.பி.க்குதான் ஓட்டுக்கள் சென்றிருக்கிறதாம். அதே போல புனேயிலும் இது போன்று ஒரே கட்சிக்கு ஓட்டுக்கள் சென்றிருப்பதாக ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள் அந்த நாளேடு.
எது எப்படி நடந்தாலும், வரவிருக்கும் தேர்தலில் நம் கழகத்தை வெற்றி பாதையில் அழைத்துச் செல்ல உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications