இரு தரப்பையும் ஆதரிக்க முடியாது… திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பின் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
அதிமுகவில் உள்ள இரு தரப்பையும் ஆதரிக்க முடியாது என்று எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பின்னர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக முடிவெடுத்துள்ள நிலையில் மற்றொரு தரப்பையும் ஆதரிக்க முடியாது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாளை நடைபெற உள்ள சட்டசபைக் கூட்டத்தில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக முடிவெடுக்க திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவெடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாளை நடைபெற உள்ளக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருக்கிறார். அப்படி கோரும் போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தமிழர்களின் வாழ்வுரிமை அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிமுக ஆட்சிக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி கோரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று அவரை எதிர்த்து வாக்களிக்க திமுக முடிவெடுத்திருக்கிறது. திமுகவின் 89 எம்எல்ஏக்களும் எதிர்த்து வாக்களிக்க உள்ளோம்.
மறைமுக வாக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அப்படி வந்தால் அதனை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.