காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி 3வது நாளாக திமுக தொடர் போராட்டம்.. தமிழகம் முழுக்க மறியல்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திமுகவினர் 3-ஆவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி விவகாரத்தில் திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த திட்டத்தையும் உருவாக்கவில்லை. கெடு முடிந்தும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகம் கொந்தளிப்பில் உள்ளது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

கைது செய்யப்பட்டு விடுதலை
இந்த கூட்டத்துக்கு பின்னர் அனைத்து கட்சி தலைவர்கள் திடீரென வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து ஸ்டாலின், திருமா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர் போராட்டம்
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கைது செய்தாலும் போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி நேற்றைய தினம் சென்னையில் 30 இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது
இந்நிலையில் 3-ஆவது நாளாக இன்று சென்னையில் 10 இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மடிப்பாக்கத்தில் மறியல் நடத்திய மா.சுப்பிரமணியன், ஓட்டேரியில் மறியல் நடத்திய சேகர்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மறியல் போராட்டம்
அதேபோல் தேனாம்பேட்டையில் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் தலைமையில் மறியல் நடைபெறுகிறது. மேலும் மதுராந்தகத்தில் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை திமுக எம்எல்ஏ புகழேந்தி தலைமையில் தண்டவாளத்தில் படுத்து கொண்டு மறியல் போராட்டம் நடக்கிறது.

விமான நிலையம் முற்றுகை
அதேபோல் சென்னை- கொருக்குபேட்டை ரயில் நிலையத்தில் நவஜீவன் விரைவு ரயில் மற்றும் அந்தமான் விரைவு ரயில் ஆகியவற்றை வழிமறித்து போராட்டம் நடத்தப்படுகிறது. கோவையில் விமான நிலையத்தை முற்றுகையிட்டும் திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!