மத்திய அரசுக்கு குடைச்சல்..100 நாள் திட்ட நிதி கோரி மார்ச் 29-ல் தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்
சென்னை: 100 நாள் வேலை திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.4034 கோடியை வழங்காத மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் 29-ந் தேதி ஆளும் திமுக கண்டனப் போராட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 09-03-2025 அன்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயம், திமுக அலுவலகத்தில் நடைபெற்ற "தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் "கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது, “தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை ஒன்றிய அரசிடம் பெற வேண்டும்” என்றும்; அத்துடன் 'ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது’ குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க, “மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து 25.03.2025 அன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் - தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 29.3.2025 சனிக்கிழமை அன்று காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”நடைபெறும்.
மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications