மோடியின் கொ.பா.சேவாக 'மாறிய' குஷ்பு
சென்னை: மோடி பிரதமராக பதவியேற்க தயாராகும் நேரத்தில் கிட்டத்தட்ட அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் போல மாறிவிட்டார் திமுக பிரச்சார பீரங்கியான நடிகை குஷ்பு.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நிலவியது. திமுகவின் பிரச்சார பீரங்கியான நடிகை குஷ்பு, பாஜகவையும், மோடியையும் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், இப்போது குஷ்புவின் மோடி மீதான நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.
நரேந்திரமோடியின் டுவிட்டர்களை ரீடுவிட் செய்வதிலேயே குஷ்பு இன்று பெரும்பொழுதை கழித்தார் என்றால் அது மிகை கிடையாது. "நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண்கள் பங்களிப்பு அவசியம். வீட்டை கவனிப்பது மட்டுமே பெண்களின் வேலை என்ற நிலை இப்போது மாறிவிட்டது. நாட்டை உருவாக்குபவர்களாக பெண்களை நாம் பார்க்க வேண்டும்" என்பது ஜனவரி 19ம்தேதி மோடி செய்த டுவிட். அதை தேடிபிடித்து இன்று குஷ்பு ரீடுவிட் செய்துள்ளார் என்றால் அவரது கடமை உணர்வு அபாரம் என பாராட்டத்தான் வேண்டும்.
இதேபோல ரயில் விபத்து குறித்த மோடியின் இன்றைய டுவிட்டையும், குஷ்பு தனது பாலோவர்களுக்காக ரீடுவிட் செய்துள்ளார். மோடியை மட்டுமல்ல சுஷ்மாவுக்கும் கொ.பா.சே குஷ்புதான் போலும். சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் அக்கவுண்ட் பெயர் மாறியுள்ளது என்று டுவிட் செய்ததையும் குஷ்பு ரீடுவிட் செய்து நல்ல பிள்ளையாக நடந்துகொண்டுள்ளார். திமுகவும் மோடிக்கு எதிரான விமர்சனங்களில் காட்டத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.