சுயநல அதிமுகவிடம் மக்கள் ஆட்சியைக் கொடுத்து விட்டார்களே.. டி.கே.எஸ். இளங்கோவன் விரக்தி!
சென்னை: அதிமுக சுயநலம் மிக்கது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த விரும்பாத கட்சி. ஆனால் அக்கட்சியிடம் போய் மக்கள் ஆட்சியைக் கொடுத்து விட்டனர் என்று கூறியுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன்.
ஏன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் இளங்கோவன். மேலும் தமிழக மக்கள் அதிமுகவிடம் ஆட்சியைத் தந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இளங்கோவன் அளித்துள்ள பேட்டியிலிருந்து....
சுயநல அதிமுக
அதிமுக மிகவும் சுயநலம் மிக்க கட்சி. இக்கட்சியிடம் அடுத்த 5 ஆண்டுகளையும் ஆட்சி செய்ய மக்கள் அதிகாரம் கொடுத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதிமுக எப்போதுமே மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டதே கிடையாது.
நல்லது செய்யாது
இந்த அரசு நல்லது செய்யாது. மக்களின் வளர்ச்சிக்கு தேவையானதை செய்யாது. பொருளாதார வளர்ச்சியை கொண்டு வராது. தங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடியவர்கள் அதிமுக அமைச்சர்கள்.
துரதிர்ஷ்டம் பிடித்த ஐந்தாண்டுகள்
அடுத்த ஐந்து ஆண்டுகளும் தமிழகத்தை துரதிர்ஷ்டம்தான் ஆளப் போகிறது. தமிழக மக்களின் இந்த முடிவு மிகவும் வருத்தத்திற்குரியது.
டெல்லி செல்லத் தயாரா ஜெயலலிதா?
மீனவர் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதி வருகிறார் ஜெயலலிதா. அவருக்குத் தைரியம் இருந்தால் டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரடியாக முறையிடட்டும். உண்மையிலேயே அவருக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று பிரதமருடன் நேரடியாக மோத வேண்டும். அதைச் செய்ய அவர் தயாரா? என்றார் இளங்கோவன்.